black and white television

இந்த வருடம் தாங்ஸ்கிவ்விங்கிற்கு ஒரு LCD டெலிவிஷன் வாங்குவதாய் எண்ணம். வீட்டில் இருக்கும் பழைய Cathode Ray Tube பெட்டியில், CNN சானலில், C மட்டுமே தெரிகிறது. மற்ற இரண்டு Nகளும் இழுத்துக் கொண்டு போய் விட்டன. அப்படி ஒன்றும் பெரியதாய் இழந்துவிடவில்லை என்றாலும், அமெரிக்க மார்க்கெட்டிங் விடமாட்டேன் என்கிறது.

முதலில் பெரிய திரை என்றார்கள். பிறகு வைட் ஸ்கிரீன், ப்ளாஸ்மா, ரியர் புரஜக்-ஷன் என்று இப்போது எல்சிடி வரை வந்திருக்கிறது. பிறகு எல்சிடியில் pixel எனப்படுகிற ஒளிப்புள்ளிகளை வைத்து மார்கெட்டிங் செய்கிறார்கள். தற்போதைய பேஷன் 1080p என்கிற வகை. இதனை full HDTV என்கிறார்கள். இந்த 1080pக்கும் இதற்கு முந்தைய மாடலுக்கும் எந்த சாமானியனுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனாலும் மீடியா அடிக்கடி இதை மார்கெட்டிங் செய்வதால் எல்லாரும் வாங்குகிறார்கள். நவராத்திரிக்கு இருந்த மாடல் போய் திபாவளிக்கு புது மாடல் வரும் மார்க்கெட் இது. இந்த இயந்திர பித்துக்கு ஒரு முடிவே இல்லை.

எங்கள் வீட்டின் முதல் டிவி பெட்டி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாங்கினார்கள். முன்னமே 83′ world cupஐ பாட்டி வீட்டின் சாலிடைரில்(Solidaire) பார்த்திருந்தாலும், எங்கள் வீட்டில் ஷட்டரோடு வாங்கிய B & W சாலிடைர் தான் ரொம்ப பிடித்திருந்தது. டிவி வாங்குவதே குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில் ஷட்டரோடு வந்த டிவியை மூடி மூடி வைத்திருதேன். பள்ளியில் படித்தவர்களோடு சாலிடைர் தான் நல்ல டிவி தான் என்று சண்டை வேறு. மற்றவர்கள் டயனோரா, ஈஸி டிவி, அப்ட்ரான் என்று சொன்னார்கள். எனக்கு சாலிடைர் தான் நல்ல டிவி. டிவிக்கு முன்னால் நின்று போட்டோ எடுப்பது தான் அப்போதைய பேஷன். என் அப்பா என்னையும் தங்கையையும் வைத்து நிறைய போட்டோ எடுத்தார்.

அப்போது டிவி வாங்குவது எதாவது ஒரு நிகழ்ச்சியை சார்ந்தே இருந்தது. என் பாட்டி வீட்டில் வாங்கிய முதல் டிவிக்கு காரணம், 83 உலகக் கோப்பை கிரிக்கெட், முதல் கலர் டிவிக்கு காரணம் 88 விம்பிள்டன். எங்கள் வீட்டில் வாங்கிய முதல் டிவி ’84 குடியரசு தினத்திற்கு முதல் நாள். அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து, பூஸ்ட் குடித்து டிவிக்கு முன் உட்கார்ந்து குடியரசு தின அணிவகுப்பை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

Bravery Awards for Kids என்கிற போஸ்டரோடு, ஒரு யானை மேல் வீரதீர செயல்களுக்காக பரிசு வாங்கிய சிறுவர்கள் பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதை என் அப்பா விளக்க, அன்றிலிருந்து முழ்குகிற யாரையாவது முடியை பிடித்து தூக்கியோ, பள்ளத்தில் விழுந்த குழந்தையை கையைத் தூக்கி காப்பாற்றவோ வேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தேன். ஓரிரு முறை கனவும் வந்தது. எப்படியாவது டெல்லி போய் யானைச் சவாரி செய்ய எண்ணம்.

அதற்கு பிறகும் ஒவ்வொரு குடியரசு தினத்துக்கும் அந்த குழந்தைகள் பரிசு லிஸ்டை தந்திப் பேப்பரில் பார்த்து விடுவேன். மிசோராமிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் வரும் குழந்தைகளை பார்க்க வியப்பு. இவர்கள் யாரைக் காப்பாற்றினார்கள், யார் இதை அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டார்கள், இதெல்லாம் உண்மையா, நமக்கேன் ஒரு கேஸும் மாட்டவில்லை என்றெல்லாம் பல குழந்தைத்தனமான கேள்விகள்.

ஏழாவது படிக்கும் போது ஒரு கல்யாணத்திற்காக திருவாரூர் போக நேர்ந்தது. கோயில் குளத்தைச் சுற்றி இருந்த வடக்கு மாட வீதியில் இருந்தது கல்யாண மண்டபம். காலையில் மாப்பிள்ளை ஊஞ்சலில் ஆட, கலர் சாத உருண்டைகளால் மாமிகள் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்க, எதிரில் இருந்த குளத்தின் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை ஆதலால் யாரும் இல்லாமல், படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, தண்ணிரீல் காலை நனைத்துக் கொண்டிருந்தேன். பாசியில் சறுக்கி சரேலென உள்ள போக, யாரோ ஒரு ஆரை டிராயர் சிறுவன் ஓடி வந்து அதே நொடியில் கையை பிடித்து இழுத்து விட்டான். என் கழுத்து வரை தண்ணீருக்கடியில் போயிருந்தது. வெளியே வந்து சுதாரித்துக் கொள்வதற்குள், ஏதோ தேவதூதன் போல ஓடிப் போய்விட்டான். மண்டபத்தில் எல்லாரும் கெட்டி மேள பூ போடுவதில் பிஸியாயிருக்க, நனைந்த புது ட்ரஸ்ஸுடன் யாருக்கும் தெரியாமல் ரூமுக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்தேன்.

அந்த சிறுவனுக்கு, அடுத்த ஆண்டு யாரும் குடியரசு தினத்தில் Bravery Award தந்ததாக நினைவில்லை. எனக்கும் யானை சவாரி கனவு மீண்டும் வரவேயில்லை.


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>