kollywood sunglass team

போன வாரம், ஒகேனக்கல் விஷயத்திற்காக கோடம்பாக்கத்து சன்கிளாஸ் படை மேடையில் கை கோர்த்ததை கண் குளிர பார்த்தோம். அப்போது பேசிய சிலரின் உண்மையான வொக்காபுலிரியும் புல்லரித்தது. குறிவைத்து ரஜினியின் பேச்சுக்கு வந்த மிகையான கர்நாடக எதிர்ப்பும், அதற்கு கொஞ்சம் கோபமான தொனியில் வந்து விழுந்த ரஜினியின் பதிலும், தமிழர்களை சில நிமிடங்கள் சிந்தனையிலும், அதைவிட முக்கியமாக சுவாரசியத்திலும் ஆழ்தின.

ரஜினி சற்றே கோபமாய் பதிலளிப்பது இது முதல் முறையன்று. ஆனால் நிஜமாகவே இந்த பதில் அவரின் கோபத்தின் வெளிப்பாடா அல்லது ச்சும்மா உல்லுலாக்காட்டிக்கு கோபமா என்று யோசித்துப் பார்க்கலாம். இமயமலை செல்வது, தியானம் செய்வது எல்லாம் இருந்தாலும், 25 வருடமாக இந்த சினிமா என்னும் ஒரு மாயச் சுழற்சியில் இருப்பவர். இதைப் போன்று ஏராளமான துக்கடா மேட்டர்களை சந்தித்தவர், முதிர்ச்சியுடன் தான் இருக்க முடியும். இதற்கெல்லாம் அத்தனை சீக்கிரமாக கோபப்பட்டு விடுவார் என்று தோன்றவில்லை. அவருடைய பதிலில் நிதானம் தெரியவில்லை என்றாலும், இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்ப்பிற்கு, இதைத் தவிர வேற வழியிருப்பதாய் தோன்றவில்லை. தன்னை சுற்றி பின்னப்படும் இந்த பிதற்றல் அரசியல் தேவையா என்று கூட ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால், it comes with the job. கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றினாலும், தென்னிந்தியாவில் மட்டுமே பெருமளவு, இவைச் சாத்தியம்.

கமலஹாசனும் இந்த மாதிரியே மேடை நாகரீகம் கருதி சில விஷயங்களுக்கு ச்சும்மா கோபப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு உண்மையாகவும் கோபப்பட்டார். ஆனால் அது அவருடைய வேலையை செய்யவிடாமல் தடுத்தற்காக. சண்டியர் என்று பெயர் வைத்திருந்த படத்தை எடுக்க விடாமல், தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் ஆதாயம் தேடிப் பேசிய அரசியல்வாதிகளைப் பற்றிய கோபம். உண்மையானது.

காலையில் எழுந்து வேர்க்க விறுவிறுக்க வேலைக்குச் சென்று வந்து, அப்பாடா என்று மெகா சீரியல் பார்க்கும் மெஜாரிட்டி தமிழர்களுக்கு, இந்த ஒகேனக்கல் சண்டை பல விஷயங்களில் ஒன்று. மற்றபடி சிம்பு பக்கத்தில் உட்கார்ந்த நயன்தாரா ஏன் பேசவில்லை, திரிஷாவின் ஒரிஜினல் கலர் இவ்வளவுதானா, சத்யராஜ் மயிறு என்றாறா மசிறு என்றாறா, அஜித்தின் கண்ணாடி ரேபானா வாரிலக்ஸ்ஸா என்பது போன்ற philistinistic கேள்விகள் தான். ஆக நம்மில் பலர் இந்த ஒகேனக்கல் விஷயத்திற்காக ஒரு நிமிடம் வருத்தப்பட்டாலும், முக்கியமாய் நம்மை ஆக்கிரமிப்பது இந்த ஹெட்லைன் நியூஸும் அதனைப் பின்தொடரும் இவ்வகை விசித்திர துணுக்குகளும் தான்.

ஒரு பத்து வருடங்களுக்கு பின் யோசித்துப் பார்த்தால் இதிலுள்ள அபத்தம் தெரியும். சுஜாதா சொன்னது போல், இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர.


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>