‘எழுத்தாளர்கள்’ Posts

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

“ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

oo0000oo

இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

oo0000oo

கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

oo0000oo

விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.


போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

தி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010 படிக்கக் கிடைத்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.

ஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

என்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.

அந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ். அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு, நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know. இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.
ஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றன. என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.

ooOOOOoo

மேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து, 1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.

இந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”

இத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே. இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.
இந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.

ooOOOOoo

தினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.

இது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.

ooOOOO00

நான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட! மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.

ooOOOOoo

கொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.

முன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம். உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா?”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள் தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது. இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா!

ooOOOOoo


போன வாரம் தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற தொடர்.

Heroes journey

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் ஜோசப் காம்ப்பெல் எழுதிய ‘A hero with thousand faces’ என்னும் புத்தகத்தில் நாமறிந்த நாயகனைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். பல கலாசாரங்களையும் மதங்களையும், அவை சொல்லும் ஆயிரமாயிரம் மரபுக்கதைகளையும் படித்து எல்லா நாயகர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அதை வைத்து ஒரு ஹீரோவின் இலக்கணத்தை எழுதி விட்டார். அதாவது எல்லா நாயகர்களுக்கும் if-else கண்டிஷன், for loop உட்பட ஓர் அல்காரிதம் இருக்கிறது. இந்திரன் சந்திரனிலிருந்து எந்திரன் வரை இதே இலக்கணம்தான், ஆங்காங்கே சில இடைவெளியும் சில தாவல்களும் மட்டும்தான் வித்தியாசம். இந்த இலக்கணத்தை ஒற்றைப் புராணம் (mono myth) என்றழைத்தார்.

அதாவது ஒரு நாயகனின் பயணத்தில் சில மைல்கல்கள் உள்ளன. டுவிட்டர் வேகத்தில் சொன்னால் – ஒரு நாயகன் சாமானிய உலகத்திலிருந்து இயல்பை கடந்த ஆச்சரியங்கள் நிறைந்த உலகத்தில் நுழைகிறான். அங்கே அற்புத ஆற்றல்கள் வெளிப்பட்டு ஒரு முடிவான வெற்றி வெல்லப்படுகிறது. நாயகன் அந்த மாய உலகத்திலிருந்து மீண்டு தன் சகமனிதனுக்கு வரமளிக்கும் சக்தி கொண்டவனாகிறான். கிருஷ்ணர், புத்தர், கிறிஸ்து என்று எல்லாருடைய கதைகளும் இதில் அடக்கம். இந்த ஒற்றைப்புராணத் தியரியை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களும் படங்களும் வெளிவந்தன, வந்துக்கொண்டிருக்கின்றன. ஸ்டார்வார்ஸ் ஜார்ஜ் லூகாஸிலிருந்து ஹாரி பாட்டர் ஜேகே ரவுலிங் வரை இதுதான் இன்ஸ்பிரேஷன்.

காம்ப்பெல் ஒரு கப்பல் பயணத்தில் நம் அடையாறு கிருஷ்ணமூர்த்தியை (ஜேகே) சந்தித்தார். ஜேகே அவருக்கு இந்திய கலாசாரத்தையும் அதன் தத்துவ ஞான மரபையும் விவரிக்க அதில் ரொம்பவே சொக்கிப்போய் கத்தோலிக்கராய் இருப்பதைத் துறந்தார். அவர் இறக்கும் வரை ஹிந்து மற்றும் இந்தியத் தத்துவத்தின் மேலும் ரொம்பவும் ஆர்வமாயிருந்தார். காம்பெல்லின் இந்த நாயக ஆராய்ச்சிக்கு ஜேகே மிக முக்கியக் காரணம்.
இந்தப் புத்தகத்தில் காம்ப்பெல் சொல்ல வருவது எப்பொழுது புராணத்தில் இருக்கும் கவித்தன்மையை கேள்வி கேட்க ஆரம்பிகிறோமோ அப்போது அந்த புராணம் மறித்துப் போகிறது. கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா அத குஞ்சரஹ’ சொல்லச் சொன்னது சரியா, கிறிஸ்து தண்ணீரில் நடந்தாரா என்று கேட்கும்போதே அவர் மூழ்கிவிடுகிறார். ரஜினிவிஜயஷாருக்கமிதாப ஹீரோக்களும் அவர்கள் செய்யும் வீரதீர செயல்களையும் கேள்வி கேட்பதாகாதென இதனால் அறிக.

OOO

சொக்கன் எழுதிய ரஹ்மான் – ஜெய்ஹோ புத்தகத்தை வீட்டின் எல்லா அறைகளிலும் கொஞ்சமாக படித்து முடித்தேன். முடித்த இடம் குளியலறை. 90களில் ரஹ்மான் இசை வர ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால், இந்தப் புத்தகம் ஒரு வாக் டவுன் த மெமரி லேன் போலத் தோன்றியதில் ஆச்சரியமில்லை. திலீப் என்ற அந்தச் சிறுவன் ரஹ்மானாகிய புராணம்தான் புதிதாயிருந்தது. இத்தனை தகவல்கள் இருக்கும் புத்தகத்தில் ஒரே ஒரு தகவல் பிழையைத்தான் தேற்ற முடிந்தது, அதுவும் இப்போது மறந்து விட்டது. இதற்காக சொக்கனுக்கு ஷொட்டு.

இம்மாதிரி வேகமாய் நகரும் பயோகிராபிகள் அ-புனைவுகள் எழுதுவது ஒரு கலை. அதுவும் பயோகிராபிகளுக்கு மெனக்கெடல்கள் பல. மனைவி வீட்டில் இல்லாத ஒரு நாளில், சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பை எழுதுகிறேன் பேர்வழி என்று வீடெல்லாம் அவர் புத்தகங்களைப் புரட்டிப் போட்டு, அது ஒரு பக்கம், ஃபாஸ்ட் ஃபுட் டப்பாக்கள் ஒரு பக்கம் என அந்த புத்தகங்களிலிருந்து ஒரு இரண்டு பக்க குறிப்பெழுதுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. அதை சுஜாதா படித்து விட்டு, “ஓகே… அங்கங்க கொஞ்சம் தப்பு இருக்கு” என்று சொன்னதாக ஒரு சமயம் தேசிகன் சொன்னார்.

OOO

டால்பின் தண்ணீரில் குதிப்பதைக் கவனித்ததுண்டா? முதல் முறை மேலெழுந்து குதித்து தண்ணீருக்குள் மூழ்கி ஓரிரு வினாடிகள் கழித்து சற்றே மேலே தலைகாட்டி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும். இதற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம். அதுவும் டால்பினைப்போல மேலெழுந்து ரிசஷனாகி திரும்பவும் மேலே வருகிற போது ரிசஷனாவதுதான். இதைத்தான் டபுள் டிப் என்று கடந்த இரு மாதங்களாக இடஞ்சுட்டிப் பொருள் விளக்கமளிக்கிறார்கள்.

ரிசஷன் போனாலும் வந்தாலும் கவலைப்படாமல் சூரியன் போய் குளிர் வர ஆரம்பித்தாயிற்று. இனி மூன்று மாதங்களுக்கு வீடு வாங்குவோர் யாரும் இலர். மால்களில் கைப்பிடித்து கோக் குடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது 60 இஞ்ச் பிரகாசத்தில் தன்னை மறத்தல் மட்டுமே. எல்லா சீரியல்களும் இலையுதிர்காலத்திற்கு ரெடி. ஆறு ஆண்டுகளாக வெளிவந்து சக்கைபோடு (தமிழ்-தினசரித் தமிழ்) போட்டுக்கொண்டிருக்கும் டெஸ்பரேட் அவுஸ்வொய்ப்ஸ் என்னும் சீரியலை கொண்டு செய்வதரியாது டைரக்டர் முழிப்பது தெரிகிறது. ஒரு காலனியில் இருக்கும் 5-6 பெண்மணிகளின் சுவாரசிய வாழ்க்கைதான் கதை. இப்படிப் போய்க் கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ஆர்வமிழந்து, அடுத்த வீட்டுக் கணவனையும் பையனையும் பெண்ணையும் மற்ற வீட்டுக்காரர்கள் துரத்துவதும், ஆபிஸ் போகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீடுகளில் கெட்ட காரியம் பண்ணவைத்து மீதிக் கதையை பூசி மொழுகிறார். இதைப் போல நம்மூர் மெகாசீரியல் வகையறாக்கள் ‘சுவாரசியமாய்’ போய்விடும் அபாயமுண்டு.

OOO

“We were discussing string theory and its infinite possibilities on human existence till 3 am while listening to Miles Davis but now it’s time for Rajini” என்று சிலர் ஜெர்க் விடுவதை காது கொடுத்து கேட்டீர்களா?

சமீபமாக ரஜினி பற்றிய ஒரு செயற்கைக் கவர்ச்சி பரவி வருவதைப் பார்க்க முடிகிறது. அதாவது என்னதான் தான் இண்டலெக்சுவலாக இருந்தாலும் என்னுடைய ரிலாக்சேஷன் ரஜினிதான் என்கிறார்கள். ஒரு காலத்தில் ரஜினியின் படங்களை விழுந்தடித்துக் கொண்டு பார்த்தவன் என்ற முறையில் இதிலுள்ள மயக்கம் புரிகிறது. ஓப்பன் மேகஸினில் மனு ஜோசப் எழுதியுள்ள The Revenge of Rajinikanth கட்டுரையில் சில விஷயங்களில் உண்மையிருக்கின்றன.

இத்தனை சொல்லிவிட்டு அந்த ஹூமனாய்டைப் பற்றிச் சொல்ல விட்டுவிட்டால் எப்படி. இன்றைக்கு எந்திரன் பார்க்கப் போயிருந்த போது, ரஜினியின் எட்டடி கட்-அவுட்டும், மாலையும், activation date: 10:01:10 என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட எந்திரன் டீஷர்ட்டையும் பார்க்க முடிந்தது. கட்-அவுட்டின் கீழ் உபயதாரரின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது என்பது உப தகவல். அதன் அருகில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்ட அனைவரும் உடனடியாக ஃபேஸ்புக்கிற்கு அப்லோட் செய்தது வம்புத் தகவல்.

கதையில் ஆங்காங்குதான் சுஜாதா தெரிகிறார் என்று எழுதியவர்களுக்கு – எனக்குத் தெரிந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். தலை நிறைய சடாமுடியுடன் முடிவெட்ட வரும் ரஜினியிடம், “என்ன சார் ஐயப்பாவா?” என்று கேட்கும் நாவிதனிடம், “வேலைப்பா” என்பதும், ராகம் திருத்தும் ரோபோவும், கொசு ரங்குஸ்கியிலும், “என்னங்க இது போரிட வாங்கன்னா பொயட்டரி சொல்லுது இந்த ரோபோ” என்று சொல்லும் ஆர்மி ஆபிஸர் வரை சுஜாதாலஜி. இந்த சமுதாயத்தில் ஒரு மனித ரோபோ இருந்தால் எப்படி என்ற கேள்விக்கு முதல் பாதியில் க்ரியேடிவாக பதில் சொல்லுகிறார் ஷங்கர். அவ்வை சண்முகியில் கமல்-ரவிகுமார் செய்யாமல் விட்ட க்ரியேடிவ் விஷயங்களைப் போல், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாத ஷங்கர் கெட்டிக்காரர். இதே போல் தியேட்டருக்கு பணம் கொடுத்து வந்து என்னை சுவாரசியப்படுத்து, அழவை, சிரிக்கவை, பிரமிக்கவை என்று சொல்லும் பார்வையாளனை ஏமாற்றாமல் யதார்த்தம், அ-யதார்த்தம், காதல், ரசனை என்று சரியான கலவைச் சமன்பாட்டைத் தன்வசப்படுத்தி விட்டார். ஆனால் இரண்டாம் பாதி ரொம்பவே இரைச்சல். குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து வெளியே போன தந்தையர்கள் வரும் முன் முடிந்து போனது அரிமா அரிமா.
மக்களுக்கு பிடித்துப்போன ஒரு கதாபாத்திரம் பின்பாதியில் மாறிப்போய், கிட்டத்தட்ட காணாமல் போய் கடைசியில் மீண்டும் வருவதும், அதன்பின் வரும் க்ளைமாக்ஸில் அதை எமோஷனலாகப் பயன்படுத்த முயல்வதும் திரைக்கதை கவனக்குறை. டாட்.


ஏகப்பட்ட விமர்சனங்களும் குடலாபரேஷன்களும் பண்ணப்பட் எந்திர இசையை கேட்க முடிந்தது. புதிய மனிதனை பூமிக்கு கொண்டு வரும் பாடலில் ஆரம்பித்து இயந்திரப் புகழ் கொஞ்சநஞ்சமில்லை. காதல் அணுக்களில் ரஹ்மான் தெரிகிறார், விஜய் பிரகாஷ் மின்னுகிறார். செந்தேனில் ஒஸ்ஸாபியை பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டதனால் மன்னித்து விடலாம். மற்றபடி காலமாற்றத்தில் மறக்கப்படும் பாடல்கள். ஆடியோகிராபர் ஹெச். ஸ்ரீதரின் மறைவிற்குப் பின் ரஹ்மான் பாடல்களின் மிக்ஸிங் குளறுபடிகள் தெரிகின்றன. அல்லது எனக்கு வயதாகி விட்டது. ஏசிடிசி, மெட்டாலிகா இரைச்சல் இசையை விழந்து விழுந்து கேட்டவனக்கு இந்த திஸ் திங் தட் திங், திஸ் திங் தட் திங்(சேர்த்துச் சொல்லிப் பழகலாம்) ஓசைகள் பிடிக்காமல் போன காரணம் என்னவோ?

ஆக எந்திரன் டிக்கெட் வாங்க பர்ஸ் பணத்தை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமகனுக்கு வாழ்த்துக்கள். உலகத்திலேயே சியாட்டலில் தான் முதல் ஷோ வருகிறது என்கிற சிவாஜி உடான்ஸை மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறார் எதோ ஒரு மகானுபாவர். லைன் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் எதிர்பார்ப்பில்லாமல் போய் பார்த்துவிட்டு எழுதுகிறேன். சுஜாதாவின் கடைசிப் படம் விஞ்ஞானக் கதையாய் இருந்து விட்டதில் ஏதோ செய்தி இருக்கிறது.

வருங்காலத்தில் எல்லோரும் பதினைந்து நிமிடத்திற்கு பிரபலமாய் இருப்பார்கள் என்று சொன்ன வரைகலைஞர் அண்டி வார்ஹோலின் வாய்க்கு சர்க்கரை போடலாம். அல்லது புண்ணாக்கு. மீடியாவில் அதுவும் இந்திய மீடியாவில் எல்லோரும் பதினைந்து நிமிடங்கள் பிரபலமாகிறார்கள். ப.நி.பிரபலங்கள் 15 நிமிடங்களோடு விட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு சானலிலும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆவாது. பாகிஸ்தான்ல வெள்ளம் பற்றி ஹெட்(வெட்)லைன் தெரியுமா என்று கேட்டால், ”சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ரஜினி வீட்டில அக்காரவுடைசல் போட்டாங்களாம்” என்று சொல்லுகிறது தமிழ் ஜனம்.

ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் படித்து முடித்தேன். ரொம்பவே கருப்பாய் இருக்கும் இந்த மேஜிகல் ரியலிச கதையை கதை தெரியாமல் படித்தால் ரசிக்கலாம். தெரிந்துவிட்டிருந்தபடியால் இயல்பான அதன் முதல் பகுதியை ரசிக்கமுடியவில்லை. மேஜிகல் ரியலிச கதைகளில் எழுத்தாளர் சொல்கிற புருடாக்களை நம்புவது முக்கியம். இந்தக் கதையில் டார்த்தீனியத்தின் அபார வளர்ச்சியை நம்பினால் மட்டும் அடுத்த பக்கத்தை திருப்பவும். அவரின் அடுத்த புத்தகமான அசோகவனம் தலையனை சைஸில் கூடிய விரைவில் வரலாம் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் காப்பிக்கு முந்துங்கள்.

இந்த வார கவிதை சிச்சுவேஷன்(இ.வா.கி.ச) -

நேற்றிரவு 1:27க்கு நண்பரை அனுப்பிவிட்டு கதவை மூடும் போது தான் அதை பார்த்தேன். மழை பெய்து கொண்டிருக்கும் நள்ளிரவில் பளிர் மஞ்சள் நிறத்தில் வானத்தை பார்த்தபடி திறந்திருந்தது என் வீட்டின் முதல் பூ. இந்தச் சிச்சுவேஷனுக்கு அரிமா அரிமா டைப் அல்லாமல் தளை தட்டாத வெண்பா, வெண்பாம், லிமரிக் அல்லது ஹைக்கூ எழுதி கவிஞர்கள் அனுப்பினால் இங்கே போடுகிறேன்.

அதைவிடுத்து நான் எழுதிய வரி வார்த்தைகளை அப்படியே
ஒன்றன்
பின்
ஒன்றாக
கீழே
எழுதி
அனுப்புவதாய்
இருப்பதற்கு பதிலாக ஆத்மநாம் சொன்னது போல,”எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்”.


January 19th, 2010

The Daemon and the Genius

This was just brilliant. Dramatic and mythological in its narration and very east in its philosophy. I’m too tempted to lend my piece of detailing but will hold-off because of the lack of words that I can use to describe my daemon/genius. It may sound cocky to say that but inevitably we have all experienced this moment atleast once. My daemon/genius could very well be a lame one neverthless it exists, not in the form that Liz explained but differently. I tend to call it the self but sure, genius works as well.

If you haven’t, you should, atleast skim through the second 36 chapters of Liz’s Eat, Pray, Love which I thought was very well written despite the cheesiness in the title and the feminism that people thought existed in this book.