‘இந்தியா’ Posts

இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள்.

சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து பேப்பர் படித்தல் முக்கியம். இந்துவும் சமீபமாக நவம்பர் பெஸ்ட் போன்ற விழாக்களை ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இந்தப் படங்களை பார்த்தால் கச்சேரிகளின் who’s who தெரியவரும். இதில் ப்ரம்ம கான சபா தலைவர் நல்லி செட்டியார் தான் மிஸ்ஸிங்.

சென்னை வாழ் தமிழ் மகா குடிமகனுக்கு சாஸ்திரிய இசையில் ஆர்வமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்கள் இரண்டால் பாட்டு வந்த பொழுது ரீதிகெளளை ராகத்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோம். வருடத்திற்கு சுமார் இரண்டு சதவிகித சென்னைவாசிகள் மட்டுமே ஒரு கச்சேரியாவது கேட்கிறார்கள் என்று பட்சி சொல்கிறது. மற்றவர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இரண்டை நாலாக்க நாமெல்லோருக்கும் சில யோசனைகள் -
நம்பர் ஒன் – சிந்து பைரவியிலிருந்து சொல்லி வரும் விஷயம், தமிழில் கொஞ்சமாவது பாடுங்கள். அட்லீஸ்ட் 33% ஆவது தமிழில் இருக்கவேண்டும் என்று சபா மேலாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது பேசிக் வைக்கலாம். முன்னமே சொன்ன அவாள் இசை அவங்க இவங்க இசை ஆவதற்கு இது ரொம்பவும் முக்கியம். மேலும் ப்ராக்டிகலாகப் பார்த்தால், தமிழில் பாடினால் புரிகிறது. புரியாத இசையை ரசிக்க அதை ரொம்ப நேரம் கேட்க வேண்டும். இந்த diminishing attention span கலாசாரத்தில் இது ரொம்பவும் கடினம்.

டிசம்பரை ஹாலிடே சீசனாக பாவித்து குடும்பத்துடன் ஓரிரு நாட்கள் டிவி, சினிமா அல்லாத எதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இசைதான் என்றில்லை, கூத்துப் பட்டறை நாடகமோ, க்ரேஸியின் துணுக்குத் தோரணமோ, கதா காலட்சேபமோ, பல இருக்கின்றன. இரண்டொரு நாட்கள் சீரியல்களைத் தவற விட்டால் எந்தக் கதையும் ஓடிப்போய் விடாது.
குழந்தைகளை பாட்டு க்ளாசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களை சீசனுக்கு இரண்டு மூன்று கச்சேரிக்காவது அழைத்துப் போங்கள். குருசரண், சு.ரகுநாதன் கச்சேரி தான் என்றில்லை. அவற்றின் டிக்கெட் கட்டுப்படியாகாமல் போகலாம். மதியம் இரண்டிலிருந்து நான்குவரை நடக்கும் இலவச கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். காண்டீன் மூக்கை தொலைக்காது, பட்டுப் புடைவை கண்ணை டாலடிக்காது, நடுநடுவே சீட்டனுப்பும் காமெடியெல்லாம் இல்லாது புதியவர்களின் இசையை சுகமாக ரசிக்கலாம்.

கச்சேரி முடிந்தவுடன் பின்பக்கமாக எஸ்கேப் ஆகாமல், சபையிலிருந்து இறங்கி வந்து கொஞ்சம் ரசிகாஸுடன் கலந்து பேசிய பின் கலைஞர்கள் வீடு திரும்பலாம் அல்லது அடுத்த கச்சேரிக்குத் தொண்டையை ரெடி செய்யலாம். போன வருடம் மியூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி முடிந்தவுடன் அடித்து பிடித்துக்கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் காரில் விரைந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் பின்னே ஒரு பத்து பேராவது பேசலாம் என்று வந்து கொண்டிருந்தார்கள். இத்தனை ஓட்டமாய் வருபவர் கண்டிப்பாக தீவிர ரசிகராக இருந்தே ஆகவேண்டும். சில நிமிடங்கள் நின்று பேசிப் போயிருந்தால் அந்தப் பத்து இதயங்களை வென்றிருப்பார்.

சின்னஞ்சிறு கிளியே என்று அதே கிளியை எல்லா சபாவிலும் கூப்பிடாமல் பல்வேறு பாட்டுகளையும் வோக்கலிஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். அதே மாதிரி தங்களுடைய முத்திரைகளைத் தாண்டி எல்லா இசை நுணுக்கங்களையும் அணுகிப் பார்க்கலாம். அருணா சாயிராமுக்கு எத்தனை சீட்டு வந்தாலும் ஒரு கச்சேரியிலாவது அபங் பாடாமல் இருக்கலாம்.

மற்றபடி -

டி.டி.கே ரோடு ஏவிஎம் சங்கரா ஹாலில் நடக்கும் இசை/புத்தக/வீடியோ கண்காட்சிக்கு சென்று வாருங்கள். தனியார் கண்காட்சிதான் என்றாலும் இது போல எல்லா இசை சிடிக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது கடினம். அதே நேரத்தில், நானும் கர்னாடிக் கேட்கிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய்க்கு சீடி வாங்கி எல்லாவற்றிலும் தூசி படிய வைப்பதிலும் உபயோகமில்லை.

மக்மல் பூரி எந்த காண்டீனில் கிடைக்கிறது என்று தேடி சாப்பிடலாம். போன வருடம் நாரத கான சபாவில் கிடைத்தது.

n.shree just started, seems like a bad throat day. still awaiting the abheri classic – murugan song. #kutcheri போன்ற டுவிட்களை கச்சேரியின் இடைவேளையில் செய்யலாம். இரண்டு சாதகங்கள் – பின் தொடரும் நண்பர்களிடம் கொஞ்சம் ஜெர்க் விடலாம். கச்சேரிக்கு செல்வது ‘the in-thing” என்ற ஒரு ஃபாஷனை உருவாக்கலாம்.

0000

தாங்ஸ் கிவ்விங் தினத்திற்கு அமெரிக்கா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மதச் சடங்காக ஆரம்பித்தது பின்பு சமூக வழக்கமாக ஆனது. வான் கோழி பிரியாணி, மேஸீஸ் பரேட், அமெரிக்கன் கால்பந்து போட்டிகள், ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் என்று இவைகளைத் தாண்டி தாங்க்ஸ் கிவ்விங்கிற்கு வேறுசில நல்ல காரணங்கள் உண்டு.

அதாவது அது ஒரு குடும்பப் பண்டிகை. எங்கெங்கோ இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு நாளாவது ஒரே இடத்தில் கூடிப் பேசி கடவுளுக்கும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அமைதிப் பண்டிகை. இதனால் எல்லா ப்ளைட் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது. எல்லோரும் லீவில் போய் விடுவார்கள். இனி ஜனவரி வரை ஆபிஸ்களில் ஈ தான்.

0000

”I know…its a management school and I must be talking to you about compromises and how to manage. You don’t have to. You don’t have to compromise, you still can make money. I’m a standing proof” சொன்னவர் கமலஹாசன். கேட்டவர்கள் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள்.

இந்த youtube வீடியோ இன்னமும் ரொம்ப பிரபலமாகவில்லை. சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துவிடுங்கள்.

0000

2007ம் வருடம் மே மாதம் சியாட்டல்-கொரியா-பம்பாய் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு அடுத்த விமானம் காலை 6:30க்குதான் என்பதால், ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். எதற்காகவோ தலை தூக்கி பார்த்தபோது, விமான நிலைய நுழைவாயிலில் ஒருவர் கைகளை அகல விரித்து சிலுவையில் அறையப்படும் இயேசு நாதரைப் போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். செக்யூரிடி செக் செய்யும்போது அவர் கைகளை அகல விரிக்க, ஒரு போலீஸ்காரர் அவரின் மேல் அந்த பாம் டிடக்டரை தேய்த்துக் சோதனை செய்து கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் வந்தது. அவர் யார் என்று கொஞ்சம் யூகித்து விட்டேன். அவரும் செக் முடிந்து மிக மெதுவாக நடந்து எனக்கு ஒரு நான்கு ஸீட் தள்ளி அமர்ந்து எதோ படிக்கலானார். அடர்ந்த தாடி, ஜோல்னா போல ஒரு பை, கண்ணாடி, வெட்டாத சற்றே அழக்கடைந்த நகம், வாரப்படாத தலை, தூங்காத கண்கள் ரெண்டு. பி.சி.ஸ்ரீராம்.

ரசிகனான நான் அந்த நான்கு சீட்டுகளை தாண்டி அவரின் அருகே சென்று அமர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர் செக்யூரிடி செக்கின் போது யேசு கிரிஸ்துவாக தோற்றமளித்தை சொன்னவுடன், கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார். அடுத்த இரண்டு மணி நேரமும் தீர்க்கமாகக் கண்களை பார்த்து பேசினார். ரொம்பவே intensiveவாக கவனித்தார். ப்ளைட் கிளம்ப நேரமான போது, ‘டோண்ட் ஒர்ரி நானும் அதே ப்ளைட் தான்” என்றார். எல்லோரும் ப்ளைட் ஏறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, எதோ மெட்ரோ பஸ் ஏறுகிற லாவகத்துடன், ப்ளைட் வாசலுக்கு போனார்.

ப்ளைட்டில் அருகே உட்காரச் சொன்னார். நான் தான், “ சார் இடம் மாத்தி உட்காந்தா…அதோ அந்த ஏர் ஹோஸ்டஸ் கோவிச்சுப்பாங்க” என்று சொல்லி என் இடத்தில் அமர்ந்து விட்டேன். காரணம் அவர் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டது என்றதுதான். அதற்கு முன் அந்த ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, பேனா வாங்கி, என் டிக்கெட்டின் பின் போன் நம்பரை எழுதித் தந்தார். ”போன் பண்ணுங்க கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணலாம்” என்றார். ப்ளைட் இறங்கும் போதும் ஐபாட் கேட்டுக் கொண்டே கர்னாடக ராகம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இறங்கினார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரமும் அவரின் தலையைத் தின்று விட்டேன். அக்னி நட்சத்திரம் படத்தை எடுக்கும் போது இருந்த அவரின் மற்றும் மணி ரத்னத்தின் மனநிலையும், நாயகன் பட கடினங்களையும் கேட்க கேட்க கிட்டத்தட்ட ஒரு டூ-வே பேட்டி போல இருந்தது. சீனி கம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைக்காக பம்பாய் வந்ததாகச் சொன்னார். இணையம் பற்றி அதிகம் கேட்டார். அதில் ஈடுபட ஆர்வம் காட்டினார். என்னுடைய புகைப்பட ஆர்வத்தைப் பற்றி சொன்னேன். ப்ளிக்கரைப் பற்றியும், குறும்பட எண்ணங்களைப் பற்றியும் பேசினோம். சுவாரசியமாய் இருந்தது. அவருக்கும் இருந்தது என்றார். டிவியில் அவரின் பேட்டியை பார்க்கும் போது பொறுமை இல்லாது போனதுண்டு. நேரடியாகப் பேசியபோது அவர் பேசியபடியே நிறைய யோசிக்கிறார் என்பது புரிந்தது. சென்னைக்கு வந்தவுடன் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்ன போது. ““சினிமா கினிமான்னு போய்ட போறான்” என்று குசேலர் கதை ருக்மணியாகத் தடுத்து விட்டார்கள். கோலிவுட் ஒரு அருமையான கேமராமேனை இழந்தது அன்று தான்.

போன வாரம் அவர் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த நல்ல மனிதருக்கு இந்த தசரத சோகம் அநியாயம்.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.


போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம். சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும். போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார். இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’ சினிமா பார்த்து, அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க, நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள். விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து, கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.
எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

oo0000oo

சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள். அருளுரை, சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

oo0000oo

மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது. சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது. ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு. ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம். ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.
அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது. நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

oo0000oo

க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள். இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead” என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

oo0000oo

சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள். கடிகாரம் ஒரு குறியீடுதான். உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள். உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது. 1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

oo0000oo


September 29th, 2010

the city

35 days or so in chennai during the midst of a music season was so liberating. Not because I’m some NRI running around in kakkhi shorts and a sporty sandal. Its ironically true and I will explain why.

I was somewhat faceless, like a nomadic traveller. There was no friend who spotted me when walking in Pondy Bazaar, no mael veettu aathi pinnal ponnu who chuckled at me atleast once a day, no paalakaran who asked when I dropped by, no librarian welcoming me like a bakra to his shop. Ok, a distant distant related maama actually found me in some kutcheri and asked me, ” ambi eppidida padippu poguthu?”. Something he should have asked me 10-12 years ago. That apart, I was a literally anonymous in my own city. And I’m grumpy about it but not then.

While I was enjoying the new found anonymity that I never had in Chennai, I’m irritated that Chennai has lost its small cityness. You know what I mean, more places, more automobiles, more people, more everything. This again sounds like a desi rant or cheran’s nostalgic movie episode but its very true.

Anyway, I find travelling so invigorating and its because of this anonymity but not in my own city. No.


ஏகப்பட்ட விமர்சனங்களும் குடலாபரேஷன்களும் பண்ணப்பட் எந்திர இசையை கேட்க முடிந்தது. புதிய மனிதனை பூமிக்கு கொண்டு வரும் பாடலில் ஆரம்பித்து இயந்திரப் புகழ் கொஞ்சநஞ்சமில்லை. காதல் அணுக்களில் ரஹ்மான் தெரிகிறார், விஜய் பிரகாஷ் மின்னுகிறார். செந்தேனில் ஒஸ்ஸாபியை பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டதனால் மன்னித்து விடலாம். மற்றபடி காலமாற்றத்தில் மறக்கப்படும் பாடல்கள். ஆடியோகிராபர் ஹெச். ஸ்ரீதரின் மறைவிற்குப் பின் ரஹ்மான் பாடல்களின் மிக்ஸிங் குளறுபடிகள் தெரிகின்றன. அல்லது எனக்கு வயதாகி விட்டது. ஏசிடிசி, மெட்டாலிகா இரைச்சல் இசையை விழந்து விழுந்து கேட்டவனக்கு இந்த திஸ் திங் தட் திங், திஸ் திங் தட் திங்(சேர்த்துச் சொல்லிப் பழகலாம்) ஓசைகள் பிடிக்காமல் போன காரணம் என்னவோ?

ஆக எந்திரன் டிக்கெட் வாங்க பர்ஸ் பணத்தை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமகனுக்கு வாழ்த்துக்கள். உலகத்திலேயே சியாட்டலில் தான் முதல் ஷோ வருகிறது என்கிற சிவாஜி உடான்ஸை மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறார் எதோ ஒரு மகானுபாவர். லைன் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் எதிர்பார்ப்பில்லாமல் போய் பார்த்துவிட்டு எழுதுகிறேன். சுஜாதாவின் கடைசிப் படம் விஞ்ஞானக் கதையாய் இருந்து விட்டதில் ஏதோ செய்தி இருக்கிறது.

வருங்காலத்தில் எல்லோரும் பதினைந்து நிமிடத்திற்கு பிரபலமாய் இருப்பார்கள் என்று சொன்ன வரைகலைஞர் அண்டி வார்ஹோலின் வாய்க்கு சர்க்கரை போடலாம். அல்லது புண்ணாக்கு. மீடியாவில் அதுவும் இந்திய மீடியாவில் எல்லோரும் பதினைந்து நிமிடங்கள் பிரபலமாகிறார்கள். ப.நி.பிரபலங்கள் 15 நிமிடங்களோடு விட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு சானலிலும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆவாது. பாகிஸ்தான்ல வெள்ளம் பற்றி ஹெட்(வெட்)லைன் தெரியுமா என்று கேட்டால், ”சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ரஜினி வீட்டில அக்காரவுடைசல் போட்டாங்களாம்” என்று சொல்லுகிறது தமிழ் ஜனம்.

ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் படித்து முடித்தேன். ரொம்பவே கருப்பாய் இருக்கும் இந்த மேஜிகல் ரியலிச கதையை கதை தெரியாமல் படித்தால் ரசிக்கலாம். தெரிந்துவிட்டிருந்தபடியால் இயல்பான அதன் முதல் பகுதியை ரசிக்கமுடியவில்லை. மேஜிகல் ரியலிச கதைகளில் எழுத்தாளர் சொல்கிற புருடாக்களை நம்புவது முக்கியம். இந்தக் கதையில் டார்த்தீனியத்தின் அபார வளர்ச்சியை நம்பினால் மட்டும் அடுத்த பக்கத்தை திருப்பவும். அவரின் அடுத்த புத்தகமான அசோகவனம் தலையனை சைஸில் கூடிய விரைவில் வரலாம் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் காப்பிக்கு முந்துங்கள்.

இந்த வார கவிதை சிச்சுவேஷன்(இ.வா.கி.ச) -

நேற்றிரவு 1:27க்கு நண்பரை அனுப்பிவிட்டு கதவை மூடும் போது தான் அதை பார்த்தேன். மழை பெய்து கொண்டிருக்கும் நள்ளிரவில் பளிர் மஞ்சள் நிறத்தில் வானத்தை பார்த்தபடி திறந்திருந்தது என் வீட்டின் முதல் பூ. இந்தச் சிச்சுவேஷனுக்கு அரிமா அரிமா டைப் அல்லாமல் தளை தட்டாத வெண்பா, வெண்பாம், லிமரிக் அல்லது ஹைக்கூ எழுதி கவிஞர்கள் அனுப்பினால் இங்கே போடுகிறேன்.

அதைவிடுத்து நான் எழுதிய வரி வார்த்தைகளை அப்படியே
ஒன்றன்
பின்
ஒன்றாக
கீழே
எழுதி
அனுப்புவதாய்
இருப்பதற்கு பதிலாக ஆத்மநாம் சொன்னது போல,”எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்”.


சென்னை சென்ட்ரல்

ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை.

மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய புத்தகங்கள், பலப்பல புது அனுபவங்கள் என்று நாற்பது நாட்கள் ஓடிவிட்டன. கேரளாவில் ஆளப்புழா கோட்டயம் என கொஞ்சம் சுற்றினேன். கோவையை எட்டிப் பார்த்தேன். வாழ்வின் ஒரு மிக முக்கியமான அனுபவம் கிடைத்தது. தி.நகரை காலால் சுற்றி வந்தேன். சென்னை ரொம்பவே மாறியிருந்தது என்று க்ளீஷேவாக ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

உங்களைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சம் தயங்கும் மூன்று விஷயங்கள் நினைத்துக் கொள்ளவும் என்று எழுதியபடி யாரோ ஒரு பிரகஸ்பதி எழுதிய ஸ்பாம் மெயில் கிடைத்தது. ரொம்ப நாள் காணாமல் போய் திரும்பி எழுத வரும் போது, இம்மாதிரியான் ஐஸ் ப்ரேக்கர்கள் உதவலாம். ஆகவே, ஒன்று – காலையில் என்னதான் நேரம் இல்லாமல் இருந்தாலும் ஷவரில் நுழைந்து விட்டால் நேரம் பற்றிய ப்ரக்ஞை போய் விடுகிறது. பாத்ரூமில் கொட்டும் தண்ணீரை யோசிக்க ஆரம்பித்து எதாவது ப்ரைம் நம்பர் கணக்கிலோ புதுமைப்பித்தன் கதை முடிவிலோ போய் நிற்கிறது. இங்கே எழுதப்பட்ட கதை கூட அங்கே தான் தோன்றியது. இரண்டு – ஹாலிவுட்டில் ஹாலிடே படங்கள் என்று ஒரு ஜானர் உண்டு. அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் குடும்ப, ரொமாண்டிக் அல்லது காமெடிக் கதைகள். மற்ற சுமார்ப் படங்களை தாங்க முடியாத எனக்கு இப்படங்கள் பிடிக்கின்றன. இன்று கூட ’இட்ஸ் ஆல் அபவுட் ஹாலிடேஸ்’ என்ற ரொம்பவே போர் படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். ஒரே பண்டிகையை வைத்து இத்தனை கதைகளா? மூன்று – சட்டென ஏதும் தோன்றாததால்…பின்னர்.