‘இயந்திரா’ Posts

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

“ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

oo0000oo

இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

oo0000oo

கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

oo0000oo

விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.


October 14th, 2009

அலைபாயுதே!

google wave alai paayuthey

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.

இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.

யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.

யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.

போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.


twitter

டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர்.

நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உலகுக்கு உரைப்பதே டுவிட்டர். ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனம். பல் தேய்க்கலாம், மூக்கை சிந்தலாம், ஐஸ் க்யூப்பை மெல்லலாம், படிக்கலாம், பந்தாடலாம், மோட்டு வளையை அளக்கலாம், ப்ளாகலாம் என்று என்ன ‘முக்கியமான’ விஷயமாயிருந்தாலும், உங்களை பின்தொடரும்(follow) நண்பர்களுக்கோ, விஷமிகளுக்கோ உரக்கச் சொல்லும் சாதனம். மிக முக்கியமான செய்தி, உங்களின் டுவிட்டர் எழுத்துக்கள் எல்லாம், உடனுக்குடன் உங்களை பின் தொடர்பவர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்ஸாக போய்விடும்.

Who the hells wants to follow to me , என்று கேட்பவர்களுக்கு ஒரு அரியசிறிய செய்தி. டுவிட்டரில் தற்போது இருப்பது சில மில்லியன் பயனர்கள். நாளொன்றுக்கு சில மில்லியன் டுவிட்ஸ்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரை சுற்றி ஒரு டுவிட்டர் ecosystemமே வந்து விட்டது. ஆகவே உங்களை பின்தொடர்வதற்கு நீங்கள் ஜார்ஜ் க்ளூனியாகவோ, ஜெனிபர் லோபஸாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளை வைத்துக் கொண்டு, ஒன்றில் நான் கோயம்புத்தூரில் பஸ்சில் சைட் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் மற்றொன்றில் கோயம்பேட்டில் காய்கறி பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் டுவிட்டர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

140 எழுத்துக்களில் ஒரு விஷயத்தை பற்றி சொல்லுவது கிட்டத்தட்ட சாகசம்(சாகஸம் என்று சொல்வது பிடித்திருக்கிறது, தமிழ் காமிக்ஸ்களில் எழுதப்படுவது இப்படித்தான்). யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை யார் தெச்ச சட்டை எங்க தாத்தா தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டையில பார்த்தா மூணு முட்டை என்று இரண்டு முறை தொடர்ந்து எழுதினாலே 166 எழுத்துக்கள் ஆகிவிடுகின்றன. ஆகவே சுருங்கச் சொல்வது என்பது கஷ்டமாயிருந்தாலும் கிட்டத்தட்ட பழக்க/வழக்கமாகிவிட்டது. Diminishing rate of attention spanஐ எற்படுத்திய வலைப்பதிவுகளுக்குப் போட்டியாக 140 எழுத்துக்களுக்கு மேல் படிக்கத் தேவையில்ல்லாத அவசரப் புரட்சியின் தற்கால கருவி தான் டுவிட்டர். டுவிட்டரின் தலைவர் ஜாக் டார்ஸி, டுவிட்டருக்கான் ஒரு பரிசை வாங்கும் போது சொன்னவை இவை, “We’d like to thank you in 140 characters or less. And we just did!”.

குழப்பங்கள் தான் சில/பலரை டுவிட்டரில் இருந்து ஓட வைக்கிறது. டுவிட்டரின் ஆதாரமான கேள்விகளுக்கு மக்கள் விடை எழுதுவது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. What are you doing ? என்பதற்கு யாரும் பதிலளிப்பதில்லை, என்னையும் சேர்த்து. Kangal Irandal is over-rated. Lack of good numbers in contemporary tamil cinema made this a hit. Raja should be back என்று நான் சமீபத்தில் ஒரு டுவிட் எழுதினேன். இதற்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் என்ன சம்பந்தம். கண்கள் இரண்டால் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி, இதை பின்னால் எழுதினால் 140 எழுத்துக்கள் முடிந்துவிடும் என்பதால், சுருங்கச் சொல்லப் போய், விளைவு டுவிட்டர் அதன் ஆரம்ப விஷயத்திலிருந்து தள்ளிப் போய் விட்டது. அடுத்த டுவிட் செய்வதற்கு முன், டுவிட்டரின் கேள்விக்குத் தான் பதிலளிக்கிறீர்களா என்று ஒருமுறை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

முன்னால் சொன்ன மாதிரி ஒரு குறும் வலைப்பதிவுச் சாதனமாகிப் போய், நீங்கள் எழுதுவதற்கு மற்றவர்கள் எழுதும் பதில் டுவிட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களேபரமாக ஆகி, அதைப் படிக்கும் உங்களின் பாசக்கார பின்தொடர்பவர்கள் குழம்பிப் போய் பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள். மிகச் சமீபமாக தமிழ் வலைப்பதிவுலக ஆர்வலர்கள் எல்லோருமாக டுவிட்டருக்கு படையெடுத்து, யூனிகோடில் டுவிட்டரை சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மகா குழப்பம்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் டுவிட்டரில் என்னவெல்லாம் நடக்கும் என்று சற்றே யோசித்துப் பார்த்தால் -

லியோ தல்ஸ்தோயின் அன்னா கரினினா தலையணை சைஸ் புத்த்கத்தை, தினம் ஒரு டுவிட்டராக பிரித்து தரும் வலைத்தளங்கள் வரலாம். அதிலுள்ள 350,296 வார்த்தைகளை தினம் ஒரு டுவிட்டராக வருவதற்குள் உங்களின் பேரன் வெர்ஜின் ஸ்பேஸ்ஷிப்பேறி வீனஸ் கிரகத்திலிருந்து டாட்டா காட்டுவான்.

ஒரே டுவிட்டர் மெசேஜில் காதல் கடிதமெழுதுவதெப்படி என்று வலைதளங்கள் புழக்கத்திற்கு வரலாம். டுவிட்டரிலேயே மீட் செய்து திருமணம் செய்து கொண்ட்வர்கள் ஜாயிண்ட்-டுவிட்ஸ் செய்வார்கள்.

Watching Simran cry on Jaya Tv என்று தாய்க்குலங்கள் மெகாசீரியல் முன்னேறங்களை மினிடுவிட்டராக எழுதி பகிர்ந்து கொள்ளலாம்.

தினம் வரும் ஆயிரமாயிரம் டுவிட்டர்களிலிருந்து, டாப்-டென் டுவிட்டர்கள் என்று தேர்தெடுத்து நியுயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடும்.

அம்பயர் போங்கடிக்கிறார் என்று தோனி மைதானத்திலிருந்து டுவிட்ஸ் அனுப்பலாம்.

வட சென்னை மாமூக்கள், போட்டுத் தள்ளுவதற்கு முன், Approaching the target in the Royapettah T.stall. Wait for the next tweet என்று நகங்கடிக்க செய்கிற மாதிரி குற்ற-டுவிட்டுகள் அனுப்பலாம்.

ஆக இந்த டுவிட்டர் தொந்தரவுகள் அடங்குவதாக காணோம். முடிந்தவரையில் ஓதுங்கி நின்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதே சாலச் சிறந்தாக தோன்றுகிறது.

பி.கு – இந்த பதிவில் இருக்கும் எழுத்துக்கள் 4,806. டுவிட்டர் மெசேஜாக்கினால் மொத்தம் 34.5 டுவிட்டர்கள். உங்கள் இஷ்டம்.


blurb

blurb (blûrb)
n.
A brief publicity notice, as on a book jacket.

blurb whore
n.
A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk.

போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட.

புத்தகங்களின் மேல் பின் அட்டையிலும், முதலிரண்டு பக்கங்களிலும் அடிக்கடி புள்ளிகள் வைத்து எழுதப்படும், அந்த புத்தகத்தை/ஆசிரியரைப் பற்றிய பில்டப் தான் ப்ளர்ப்.

blurb

நான் ஒரு ப்ளர்ப் ரசிகன். கையில் கிடைக்கிற எந்த புத்தகங்களானாலும் அதன் ப்ளர்புகளை முதலில் படித்துவிடுவேன். ஆனாலும் ப்ளர்புகளினால் இருக்கும் பயன்களை சந்தேகிக்கிற ஆசாமி. சிலவற்றில் கதையே தெரிந்துவிடும். சிலது எளிதில் பிடிபடாது. பலவற்றில் இது பில்டப் என்று தெரிந்துவிடும். பல ப்ளர்புகளின் உண்மையை அறிய அந்த புத்தகத்தை படிக்க வேண்டி வரும். இப்படி படித்து படித்து தான், யார் உண்மையான விமர்சனவாதி, யார் டகால்டி என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், டூ தம்ஸ் அப் என்று யாராவது சொன்னால் போதும், படத்தைப் பார்த்து விடுவேன். இப்போதெல்லாம், டாப் 10, டாப் 12.26 என்றெல்லாம் போடுகிற கணக்குகளை மதிப்பதில்லை. அப்படி போடுபவர் கபடநாடக வேஷதாரி, நம்பாதீர்கள்.

ப்ளர்ப் என்ற வார்த்தையின் எட்டிமாலஜி ரொம்பவும் சுவாரசியம். ப்ளர்ப் உருவாகி நூறு வருடம்(1907) தான் ஆகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கும் சார்லஸ் டிக்கின்ஸின் புத்தகங்களுக்கும் யாரும் ப்ளர்ப் எழுதிய மாதிரி தெரியவில்லை. கெலெட் பர்ஜிஸ்(Gelett Burgess) என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர், Are you a bromide ? என்னும் தன்னுடைய பிரபல புத்தகத்தின், சிறப்பு பதிப்பின் போது, அதன் அட்டையில்(dust jacket) மிஸ் ப்லிண்டா ப்ளர்ப் என்னும் ஒரு கற்பனைப் பெண்ணின் படத்தை வரைந்து, அந்த புத்தகத்தை ஹைப் செய்து ஓரிரு வாக்கியங்கள் எழுதியிருந்தார்.

பிறகு புத்தகங்களில் இந்த மாதிரி வரும், ஓரிரு வரி விளம்பரங்களுக்கு, அந்த பெண்ணின் பெயரே, நிலைத்து விட்டது.

blurb

ஆங்கில மற்றும் உலக மொழிகளில் பிரபலமான அளவு தமிழில் ப்ளர்ப் பிரபலமாகவில்லை தான். அப்படி ஆகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. பல தமிழ் எழுத்தாளர்கள் தான் எழுதியதையே மீண்டும் படித்து படித்து மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், அவர்களே அவர்களின் அடுத்த புத்தகத்தின் ப்ளர்ப்பை எழுதிக்கொள்ளலாம்.

இவை தவிர நம்மூர் பத்திரிக்கைகள் அப்படி ஒன்றும் ப்ளர்ப் போடுகிற அளவுக்கு புத்தக விமர்சனம் செய்வதில்லை. புத்தகத்தின் பின் அட்டையை படித்து விட்டு புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு இரண்டு வரிகளை எழுதிவிட்டு, புத்தகம் கிடைக்குமிடம், புத்தக பதிப்பாளர், விலை பத்து ரூபாய் என்று எழுதி முடித்து விடுகிறார்கள். இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். தமிழ் புத்தகங்களில் போடுகிற அளவுக்கு juicyயாக விமர்சனங்களும் வருவதில்லை.

கடைசியாக தமிழில் நான் படித்த ப்ளர்ப், சுப்ரமண்யராஜுவின் கதைகள் என்ற கிழக்குப் பதிப்பக புத்தகத்தில் தான். அது கூட, சுஜாதா வேறோரு தருணத்தில், “சிறந்த பத்து சிறுகதைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன், அவைகளில் சுப்ரமண்யராஜுவின் கதையும் ஒன்று” என்ற வரி தான். இது தவிர அசோகமித்திரன் ராஜுவின் மரணத்திற்கு பிறகு எழுதிய கட்டுரையில் வந்த வரிகளும் ப்ளர்பாகின.

அமெரிக்க புத்தக பதிப்பக உலகமே இந்த ப்ளர்புகளை நம்பித்தான் இருக்கின்றது. ஒரு புத்தகம் எழுதப்பட்டவுடன், அதன் manuscriptஐ, அந்த புத்தகத்தின் துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துவிட்டு எழுதியனுப்பும் சில பத்திகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தகளை புத்திசாலித்தனமாக கோர்த்து, ப்ளர்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காகவே பல ப்ளர்ப் எழுத்தாளர்களை, பதிப்பகங்கள் வைத்திருக்கின்றன.

அப்படி இல்லாமல் போனால், ஒரு அரை டஜன் ப்ளர்ப்புகளை எழுதி அனுப்பி, இவைகளில் ஏதாவதொன்றை செலக்ட் செய்ய சொல்லி மெயிலனுப்புகிறார்கள். ஒரு ப்ளர்ப் எழுதப்பட, அந்த பிரபலங்களுக்கு காபி/டிபன் என்று ஏராளமாய் செலவழிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல எகனாமிக்ஸ் புத்தக ஆசிரியருக்கு வந்த ஒரு ப்ளர்ப் வேண்டிக் கடிதம்,

If you find ________ and ________’s ideas as compelling and inspiring as we do, a quote from you that we could print on the jacket would make a world of difference. I would be happy to help craft a quote if you prefer. My contact info is below.

தற்போது படித்துக் கொண்டிருக்கும், Bill Brysonனின் The Life and Times of a Thunderbolt Kidல் எழுதப்பட்டிருக்கும் ப்ளர்பில் ஒன்று,

“The book, which is very funny…is an excercise in hyperbole, the ideal trope for the United States during this time of gragantuan confidence in progress.” – Katherine A. Powers, Boston Globe

இது மாதிரி எழுதப்படும் ப்ளர்ப்புகள் புத்தக அட்டையில், போஸ்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு, கடைகளில் விற்கப்படுகின்றன. ப்ளர்புகளை படித்து விட்டு பிடித்து விட்டால், ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தக அட்டையிலும் “No. 1 New York Best Selling Author” என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வகையான ப்ளர்ப் தான்.

அது சரி, தமிழில் ப்ளர்புக்கு சரியான தமிழ் வார்த்தை இதுவரை இல்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால், இலக்கியம் + விளம்பரம் = இலம்பரம் எனலாம். பேஷனாய் இல்லை எனக் குறை கூறுபவர்கள், கெலெட் பர்ஜிஸ்ஸின் கல்லறைக் கதவைத் தட்டி, ப்ளர்ப்பிற்கு தமிழ் வார்த்தைக் கேட்கலாம்.

—————————

இயந்திராவிற்கும் புத்தக ப்ளர்ப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு – இயந்திர-விஞ்ஞான-வியாபார உலகத்தை பற்றி ஓரு தொடர் எழுத ஆரம்பித்த போது, கிடைத்த பெயர் தான் இயந்திரா.

அவ்வப்போது நமிதா பற்றியும் நாசா பற்றியும் கொஞ்சம் சுதந்திரமாக எழுதிப் பார்க்க நினைத்த பத்தி தான் இது.


ஜிங்கிள் ஆல் த வே(Jingle all the way) என்ற படத்தில் ஆர்னால்டு ஷ்வாஸ்னிகர், தன் மகனின் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுப்பதற்கு டர்போ மேன் என்றொரு பொம்மையை தேடி ஊரெல்லாம் அலைவார். அதைப் போலவே உண்மையாக வருடத்திற்கு ஒரு பொம்மையையோ அல்லது வேறெதாவது பரிசுப் பொருளையோ தேடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பலர் இந்த மாதிரி கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள். தான் தேடிய பரிசுப் பொருள் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பணம் இருப்பவர்கள் என்ன செலவழித்தாவது வாங்கிவிடுகிறார்கள்.

nintendo wii

2007ன் டாய் அல்லது பரிசுப்பொருள் நிண்டெண்டோவின் வீ(Nintendo Wii) என்றொரு விடியோ கேம் சிஸ்டம். எக்ஸ் பாக்ஸ் போல ஒரு குடும்பத்திற்கான விளையாட்டு சாதனம். இதன் விற்பனை விலை 250 டாலர், கிட்டத்தட்ட பத்தாயிரம் இந்திய ரூபாய்க்கள். இன்றெல்லாம் சியாட்டல் கடைவிதியில் நீங்கள் அலைந்து திரிந்தாலும் வீ கிடைக்காது. கிடைத்தால் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடி விடுவார்கள். அப்படியே கிடைத்தாலும் அதை நீங்கள் உபயோகிக்காமல் ஈபே(e-bay)2யில் ஏலம் விட்டால் 580 டாலருக்கு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். இரண்டு மடங்கு பணம் கொடுத்தாவது, தன் மகனுக்கோ மகளுக்கோ பரிசாய் வாங்க ரெடி. அந்த அளவுக்கு கிராக்கி.

இந்த வீ சாதனத்தின் அமைப்பே சற்று புதுமையானது. இது வர வந்துள்ள வீடியோ கேம் சிஸ்டங்களில் இல்லாத புதுமைகள் தான் அதிகம். வீடியோ கேம்களில் இது ஏழாவது தலைமுறை. இது தான் உலகில் உள்ள லேட்டஸ்ட் கேமிங் சிஸ்டம். Wiiயை Paradigm Shift என்கிறார்கள். இந்த வீ கேமிங் சாதனத்தில், ஓரு டிவிடி சைஸ் சிஸ்டம் யூனிட்டும் ஒரு சென்ஸார் ஸ்டிரிப்பும், ஒரு ரிமோட் கண்ட்ரோலும் வருகின்றன. இந்த சிஸ்டம் யூனிட்ட்டை டிவியில் கனெக்ட் சேய்து விட்டு, அந்த infra-red sensor ஸ்டிரிப்பை டிவியின் முன் வைத்து விட்டு, ரிமோட் கண்ட்ரோலால் Wiiயை இயக்கலாம்.

nintendo wii

இதுவரை வந்துள்ள சிஸ்டங்களில் நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே பட்டனை அழுத்திக் கொண்டு ஆடலாம். Wiiயில் மட்டும் தான் நீங்கள் விளையாடும் விளையாட்டைப் போலவே ஆக்-ஷன் செய்தால் தான் இயக்க முடியும். அதாவது, வீயில் டென்னிஸ் விளையாடும் போது, வீயின் ரிமோட் ஒன்றை கையில் பிடித்து, டென்னிஸ் மட்டையை பிடித்துக் கொண்டு அடிப்பது போல டீவியை நோக்கி மூவ்மெண்ட் செய்ய வேண்டும். பந்து வருவதற்கும் உங்கள் ஆக்-ஷனுக்கும் சரியாக இருந்தால், டீவியில் பந்து மட்டையில் பட்டுச் செல்லும். ஒரே வீ சிஸ்டத்தில் பல ரிமோட்களை இயக்கலாம்.. ஆகையால் ஒரு டென்னிஸ் விளையாட்டில் வீட்டில் உள்ள நான்கு பேர் டபிள்ள்ஸ் விளையாடலாம்.

இதையே போல் பாக்ஸிங் செய்தால், அதே வீ ரிமோட்டைப் பிடித்துக் கொண்டு முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, எதிராளியின் முகத்தில் குத்து விடலாம். யோசித்துப் பார்த்தால் இதன் புதுமை புரியும். நண்பர் ஒருவரின் வீயில் பல மணிநேரம் விளையாடியிருக்கிறேன், Wii கண்டிப்பாக ஒரு paradigm shift தான்.

வெளியே பார்க்கும் போது எளிமையாக, ரிமோட்டை பிடித்துக் கொண்டு விளையாடக் கூடியதாக இருந்தாலும், உள்ளே இருக்கும் இயந்திரா கொஞ்சம் கடினமானது தான்.

அந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாரை டிவியின் முன் வைத்தவுடன், அது உங்கள் கையிலுள்ள ரிமோட்டை ஒரு 3டி ஸ்பேஸில் கணக்கிடுகிறது. அதாவது x,y,z என்னும் மூன்று தளங்களில் ரிமோட்டின் ஆரம்பப் புள்ளியை குறித்துக் கொள்கிறது. இதன் வழியாகத் தான் நீங்கள் ரிமோட்டில் yes, no, quit என்று க்ளிக் செய்வது வீ சிஸ்டத்திற்கு தெரிகிறது. இதைத் தவிர இந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாருக்கு வேறு வேலை இல்லை.

வீயின் முக்கியமான விஷயமே அதன் ரிமோட் தான். இந்த ரிமோட், வீயின் சிஸ்டத்துடன் போசுவது ப்ளூ டூத்(blue tooth)இன் வழியாகத் தான். ப்ளூ டூத் ஒரு முப்பதடிக்குள் இயங்கும்

டென்னிஸ் விளையாடும் போது, ரிமோட்டில் உள்ள அக்ஸிலரேட்டர் சென்ஸார் (acclerator sensor) சமாராசத்தின் மூலம் தான் நீங்கள் மட்டையை சுழற்ற நினைக்கிறீர்களா அல்லது ஓங்கி அடிக்கிறீர்களா என்று Wii சிஸ்டம் அறிகிறது.

wii%20remote.jpg

இந்த ஆக்ஸிலரோமீட்டர் என்ற சிப்பில், ஒரு சிலிகான் கம்பி, இரண்டு capacitatorகளுக்கு இடையே வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு capacitatorகளுக்கும் சரியான அளவில் வால்டேஜ் வழங்கப்பட, நீங்கள் ரிமோட்டை கையில் பிடித்து சுழற்றும் போது, இந்த சிலிக்கான் கம்பிகள் நகர்கின்றன. அப்போது அது ஒரு capacitatorருக்கு அருகில் செல்ல, அந்த capacitatorன் வால்டேஜ் அதிகமாகின்றது. இந்த வால்டேஜ் வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரம் நகர்த்தப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. இது ரிமோட்டில் உள்ள ப்ளூடூத் வழியாக் வீ சிஸ்டத்தை அடைகிறது.

உங்களின் இந்த மூவ்வெண்டை தனது டேட்டாபேஸில் உள்ள சில ஆயிரம் மூவ்வெண்டுகளுடன் சரிபார்த்தது எந்த மூவ்மெண்டுக்கு அருகில் உள்ளதோ அந்த மூவ்மெண்ட் உங்கள் திரையில் நடக்கிறது.

இந்த ஆக்ஸிலரோமீட்டரை MEMS(micro electro mechanical systems) என்கிறார்கள். இவைகள் ஐந்து நானோமீட்டர் அளவுக்கான அசைவுகளை கூட கணக்கிடக் கூடியவை. ஐந்து நானோமீட்டர் என்பது நினைத்ப் பார்க்க முடியாத அளவு சிறியது. உங்களின் ஒரு முடியின் அளவு 200 நானோமீட்டர்கள்.

பல சாதனங்களிலும் இன்று இந்த ஆக்ஸிலரோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் காரின் நடுவிலும் இது இருக்கிறது. இது x,y,z என்ற தளங்களில் உங்கள் காரை கண்க்கிடுகிறது. ப்ரூஸ் வில்லிஸின் Life Free Die Hard படம் போல தலைக் குப்புற உங்கள கார் உருண்டோடும் அடுத்த கணப்பொழுதில், இந்த ஆக்ஸிலரோமீட்டர்கள் அந்த அசைவை கண்க்கிட்டு, air bagsசை இயக்குகின்றன.

இப்போது வரும் பல லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்ஸிலரோமீட்டர்கள், லேப்டாப் கீழே விழப்போனால், அது கீழே விழுவதற்குள் அதன் harddiskகுகளை அணைத்து விடுகின்றன. இப்படியாக தற்போதைய புது ஹீரோ ஆக்ஸிலரோமீட்டர்கள் தான்.

Wiiயில் வாரத்திற்க்கு பல விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்னும் கிரிக்கெட் வந்தபாடில்லை. இதற்கு காரணம் இது இப்போது தான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டோரு ஆண்டுகளில் உலகின் பல நாடுகளிலும் கிடைக்கலாம். இந்தியாவிலும் வீ கிடைக்கும். கிடைத்தால் கண்டிப்பாய் வாங்கி விளையாடிப் பாருங்கள்.

இப்பொழுதே வேண்டுமென்றால், ஹூஸ்டனிலோ மினியாபோலிஸிலோ இருக்கும் உங்கள் கஸினை வாங்கி வரச் சொல்லுங்கள். கிரிக்கெட்டும் வீயில் வந்து விட்டால், நீங்கள நின்று கொண்டே போலிங் போட உங்கள் அப்பா பேட்டிங் செய்யலாம்.

Puliyaamaram Wii Cricket Team, Arrow Head Wii Cricket Team என்றெல்லாம் டீம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கண்டிப்பாய் வீ பைத்தியம் இந்தியாவுக்கு வரப் போகிறது. Wii வாங்க பணம் சேர்க்க ஆரம்பியுங்கள்.