‘இசை’ Posts

February 7th, 2012

Oh very young!

Caution, this can cause tripping!


February 20th, 2011

RIP Malaysia Vasudevan

One of my all time faves, thanks to MV for a remarkable rendering.


February 7th, 2011

இன்னொரு தல்

அமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting. சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள். 1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.

மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி, தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து, பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.

இதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon. ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன். பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

0000

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.

0000

தமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர், ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.

பாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும். நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்’ என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.

சமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. Bad Arrack.

0000

இனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம், இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா? அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள். ரொம்ப தாங்க்ஸ்.

படம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.

0000

பெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.

FIRST
..
..
This child is a marvel, a matchless wonder.
A staggering child, a child astounding,
Dazzling, diaperless, dumbfounding,
Stupendous, miraculous, unsurpassed,
A child to stagger and flabbergast,
Bright as a button, sharp as a thorn,
And the only perfect one ever born.

SECOND

Arrived this evening at half-past nine.
Everybody is doing fine.
Is it a boy, or quite the reverse?
You can call in the morning and ask the nurse.


வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 – The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 – At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி – Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு


ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள், கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை. ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன். அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம். ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது. சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும், ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள். திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன. இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?
2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.
3. கோலிவுட் ரவுண்ட்-அப்
4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்
5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை
6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது. ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம். அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம். இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும், பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.