‘மற்றவை’ Posts

Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.

ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது. இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.

அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன. பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான். அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.

நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும். மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள். அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது. ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம். இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

0000

”நாளைக்கு ஒரு ப்ரசண்டேஷன் பண்ணனும் நீங்க…” என்று முடிக்கும் முன் உடனே பவர்பாயிண்டை திறந்து வைத்துக் கொண்டு மோட்டுவளைக் கவிஞர் போல யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பவர்பாயிண்டை சரியாக உபயோகிக்காமல் அதை வைத்துக் கொண்டு யோசிப்பதன் விளைவு தான் தாங்க முடியாத கருத்துரை, வரவேற்புரை, பொழிப்புரை மற்றும் இன்னபிற உரைகள்.

பவர்பாயிண்ட் என்பது கடைசியில் வருவது. முதலில் வரவேண்டியது என்ன சொல்லப்போகிறோம், எப்படி சொல்லப்போகிறோம், ஏன் சொல்லப் போகிறோம் போன்ற தனக்கான கேள்விகள். இக்கேள்விகளை டிஜிட்டல் அல்லாத முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெள்ளைப் பலகையிலோ, போஸ்-இட்களிலோ எழுதப்படும் ப்ரசண்டேஷன்கள் திருத்தப்பட்டு கடைசியிலேயே பவர்பாயிண்டில் வரையப்படுகின்றன. இம்மாதிரி ப்ரசண்டேஷன் செய்வதற்காக நம்மை தயார்ப்படுத்தும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் டிசைன் பள்ளிகள் இருந்தும் மோசமான ப்ரசண்டேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதை சுலமாக்க நான்கு விதிகளை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதலாவது, சிங்கிள் டீ குடித்துக் கொண்டே, சொல்லப் போகிற விஷயம் என்ன என தீர்மானிப்பதும் மற்றும் உங்களின் நண்பர்கள் அல்லது குழுவுடன் விவாதிப்பது. அதாவது brainstorming.

2வது, மேலே சேர்க்கப்பட்ட எண்ணங்களை ஒரு முகப்படுத்துவது. உங்கள் வழங்குதலின்(presentation) முக்கிய கருத்து ஒன்றை தீர்மானிப்பது. இரண்டு மூன்று இருபது கருத்துக்கள் சொன்னால் புரியாமல் போய்விடும். ஆக ஒரு ப்ரண்டேஷனுக்கு ஒரு முக்கிய கருத்து. அம்புடுதேன்.

மூன்றாவது, எப்படி வழங்கப் போகிறோம் எனத் தீர்மானிப்பது. Storyboarding. வெள்ளைத் தாளில் சொல்ல வருவதை கையினால் படம் போட்டு எழுதிக் கொள்வது. இது இல்லாமல் பவர் பாயிண்டை திறப்பது, ஸ்கிரிப்ட் இல்லாமல் ஷூட்டிங் போவது போல் அபாயகரமானது. இந்த வகையில் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வைத்து ஒரு வழியாக ப்ரசண்டேஷனின் வடிவம் வந்து விடுகிறது.

கடைசியாக பவர்பாயிண்டடுகள், கலர்கள், படங்கள், அனிமேஷன்கள் ஆகியன. அனிமேஷன் இல்லமல் புல்லட்டுகள் இல்லாமல் அதிகமாய் எழுதாமல் வெறும் படங்களாலேயே சொல்லப்படும் வழங்குதல்கள் தான் ரசிக்கப்படுகின்றன என்கிறார்கள். கதை கேட்டு வளர்ந்த ஜென்மங்கள் நாம். இது எல்லா வழங்குதல்களிலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. முடிகிற போது செய்யாதது தான் குற்றம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ப்ரசண்டேஷன் என்றால் எதாவது படம் காட்டித் தான் பேச வேண்டும் என்பது அல்ல. முதலில் ப்ரசண்டேஷனே தேவையா என்ற கேள்வியை கேட்கலாம். வெறும் ஈமெயில் மெமோ அனுப்பினால் போதாதா? அல்லது ஒரு அறையில் ஒன்று கூடி பேசிவிடலாமா? இவையெல்லாம் முடியாதென்றால் வருகிறவர்களின் நேரத்தை மதித்தாவது எளிமையாக ப்ரசண்டேஷன் செய்ய முயற்சிப்பது ஒரு மினிமம் கடமை.

-

- இன்ன பிற பத்தி March 1, 2011.


February 28th, 2011

யார் தவறு?

”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.


இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா தரும் ஒரு கோலியுருண்டை மருந்தை அப்படியே முழுங்கி சரம் வெடிக்க தலை தெறிக்க ஓடியதும் பல முறை. புரசைவாக்கத்தில் அந்த கூட்டமான வெள்ளாளத் தெருவின் பல சந்துகளில் ஒரு பெரிய சந்தில் தான் என் தீபாவளி நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

பாத்ரூம் க்ரில்லில் வைத்த ‘ஆட்டம் பாம்’ வெடித்து க்ரில் பெயர்த்துக் கொண்டு வந்ததும், கொட்டாங்குச்சி மூடி வைத்த லஷ்மி வெடி வெடிக்கிறதா என்று பார்த்த போது, முகத்தில் கொட்டாங்குச்சி வெடிக்க எதிர் வீட்டு சுஜ்ஜு சிரித்ததும்(scrabbleலில் அவளை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டேன்), சாணியில் நட்ட எதோஒரு வெடி வெடித்து, நாயரின் வீட்டின் சுவர் நாஸ்தியானதும், ராதாக்ரிஷ் விட்ட ராக்கெட் நானாவின் வேட்டியை துளைத்ததும் அந்த சந்தில் தான். வீட்டில் இருந்த வெடியெல்லாம் தீர்ந்து போக நண்பர்களுடன் ரோட்டை மேய்ந்து, வெடிக்காத வெடிகளை ‘புஸ்’ கொளுத்தி அப்பாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வருகின்றன.

ஸ்கூலில் ஒரிரு வாரத்திற்கு முன்பே திபாவளி fire பற்றிக்கொள்ள, மூச்சும் பேச்சும் தீபாவளி. பக்கத்தில் உட்காரும் சேட்டுப் பெண் ஷீக்கா, ஹிந்தி க்ளாஸுக்கு போகாமல், என்னோடு தமிழ் க்ளாஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திபாவளி கதை பேசும் அளவுக்கு திபாவளி முக்கியமானது. இப்போது ஷிக்கா யாரைக் கட்டிக் கொண்டு எவ்வளவு குழந்தைகளோடு தீபாவளி பற்றி அளக்கிறாள் என்று தெரியவில்லை.

பத்தாவதுக்குப் பின் கொஞ்சமாய் பட்டாசில் நாட்டம் குறைந்து, தீபாவளி என்றால் தீபாவளி ரிலீஸ் என்றானது. தளபதியில் இருந்து தேவர் மகன், திருடா திருடா என்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு சினிமா தான்.

மூன்று வருடங்களாக, சியாட்டலில், திபாவளி அன்று காலை கங்காஸ்நானம் செய்து, சன் டீவியில் ‘முதல் முறையாக’ என்று எதை போட்டாலும் சட்டை செய்யாமல், டை கட்டி டைம்(time) படித்துக் கொண்டே பஸ்சில் ஆபீஸ் செல்கிறேன். அமெரிக்காவில் தீபாவளி என்ன, எல்லா பண்டிகைகளும் வீக்கெண்டில் தான் வருகின்றன. அல்லது வரவழைக்கப்படுகின்றன. அதுவும் ஒரு வகையில் சுவாரசியம் தான்.

இந்த தீபாவளிக்கு ஷாருக்கின் ஒம் ஷாந்தி ஓம் பார்ப்பதாய் எண்ணம். அடுத்த வாரம் தான் ATM சியாட்டலுக்கு வருகிறார். ரஹ்மானுக்காவும் விஜய்க்காவும் அதையும் பார்க்க எண்ணம். பார்க்கலாம்.


black and white television

இந்த வருடம் தாங்ஸ்கிவ்விங்கிற்கு ஒரு LCD டெலிவிஷன் வாங்குவதாய் எண்ணம். வீட்டில் இருக்கும் பழைய Cathode Ray Tube பெட்டியில், CNN சானலில், C மட்டுமே தெரிகிறது. மற்ற இரண்டு Nகளும் இழுத்துக் கொண்டு போய் விட்டன. அப்படி ஒன்றும் பெரியதாய் இழந்துவிடவில்லை என்றாலும், அமெரிக்க மார்க்கெட்டிங் விடமாட்டேன் என்கிறது.

முதலில் பெரிய திரை என்றார்கள். பிறகு வைட் ஸ்கிரீன், ப்ளாஸ்மா, ரியர் புரஜக்-ஷன் என்று இப்போது எல்சிடி வரை வந்திருக்கிறது. பிறகு எல்சிடியில் pixel எனப்படுகிற ஒளிப்புள்ளிகளை வைத்து மார்கெட்டிங் செய்கிறார்கள். தற்போதைய பேஷன் 1080p என்கிற வகை. இதனை full HDTV என்கிறார்கள். இந்த 1080pக்கும் இதற்கு முந்தைய மாடலுக்கும் எந்த சாமானியனுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனாலும் மீடியா அடிக்கடி இதை மார்கெட்டிங் செய்வதால் எல்லாரும் வாங்குகிறார்கள். நவராத்திரிக்கு இருந்த மாடல் போய் திபாவளிக்கு புது மாடல் வரும் மார்க்கெட் இது. இந்த இயந்திர பித்துக்கு ஒரு முடிவே இல்லை.

எங்கள் வீட்டின் முதல் டிவி பெட்டி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது வாங்கினார்கள். முன்னமே 83′ world cupஐ பாட்டி வீட்டின் சாலிடைரில்(Solidaire) பார்த்திருந்தாலும், எங்கள் வீட்டில் ஷட்டரோடு வாங்கிய B & W சாலிடைர் தான் ரொம்ப பிடித்திருந்தது. டிவி வாங்குவதே குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில் ஷட்டரோடு வந்த டிவியை மூடி மூடி வைத்திருதேன். பள்ளியில் படித்தவர்களோடு சாலிடைர் தான் நல்ல டிவி தான் என்று சண்டை வேறு. மற்றவர்கள் டயனோரா, ஈஸி டிவி, அப்ட்ரான் என்று சொன்னார்கள். எனக்கு சாலிடைர் தான் நல்ல டிவி. டிவிக்கு முன்னால் நின்று போட்டோ எடுப்பது தான் அப்போதைய பேஷன். என் அப்பா என்னையும் தங்கையையும் வைத்து நிறைய போட்டோ எடுத்தார்.

அப்போது டிவி வாங்குவது எதாவது ஒரு நிகழ்ச்சியை சார்ந்தே இருந்தது. என் பாட்டி வீட்டில் வாங்கிய முதல் டிவிக்கு காரணம், 83 உலகக் கோப்பை கிரிக்கெட், முதல் கலர் டிவிக்கு காரணம் 88 விம்பிள்டன். எங்கள் வீட்டில் வாங்கிய முதல் டிவி ’84 குடியரசு தினத்திற்கு முதல் நாள். அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து, பூஸ்ட் குடித்து டிவிக்கு முன் உட்கார்ந்து குடியரசு தின அணிவகுப்பை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

Bravery Awards for Kids என்கிற போஸ்டரோடு, ஒரு யானை மேல் வீரதீர செயல்களுக்காக பரிசு வாங்கிய சிறுவர்கள் பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதை என் அப்பா விளக்க, அன்றிலிருந்து முழ்குகிற யாரையாவது முடியை பிடித்து தூக்கியோ, பள்ளத்தில் விழுந்த குழந்தையை கையைத் தூக்கி காப்பாற்றவோ வேண்டும் என்று ஒரு முடிவோடு இருந்தேன். ஓரிரு முறை கனவும் வந்தது. எப்படியாவது டெல்லி போய் யானைச் சவாரி செய்ய எண்ணம்.

அதற்கு பிறகும் ஒவ்வொரு குடியரசு தினத்துக்கும் அந்த குழந்தைகள் பரிசு லிஸ்டை தந்திப் பேப்பரில் பார்த்து விடுவேன். மிசோராமிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் வரும் குழந்தைகளை பார்க்க வியப்பு. இவர்கள் யாரைக் காப்பாற்றினார்கள், யார் இதை அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டார்கள், இதெல்லாம் உண்மையா, நமக்கேன் ஒரு கேஸும் மாட்டவில்லை என்றெல்லாம் பல குழந்தைத்தனமான கேள்விகள்.

ஏழாவது படிக்கும் போது ஒரு கல்யாணத்திற்காக திருவாரூர் போக நேர்ந்தது. கோயில் குளத்தைச் சுற்றி இருந்த வடக்கு மாட வீதியில் இருந்தது கல்யாண மண்டபம். காலையில் மாப்பிள்ளை ஊஞ்சலில் ஆட, கலர் சாத உருண்டைகளால் மாமிகள் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்க, எதிரில் இருந்த குளத்தின் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலை ஆதலால் யாரும் இல்லாமல், படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, தண்ணிரீல் காலை நனைத்துக் கொண்டிருந்தேன். பாசியில் சறுக்கி சரேலென உள்ள போக, யாரோ ஒரு ஆரை டிராயர் சிறுவன் ஓடி வந்து அதே நொடியில் கையை பிடித்து இழுத்து விட்டான். என் கழுத்து வரை தண்ணீருக்கடியில் போயிருந்தது. வெளியே வந்து சுதாரித்துக் கொள்வதற்குள், ஏதோ தேவதூதன் போல ஓடிப் போய்விட்டான். மண்டபத்தில் எல்லாரும் கெட்டி மேள பூ போடுவதில் பிஸியாயிருக்க, நனைந்த புது ட்ரஸ்ஸுடன் யாருக்கும் தெரியாமல் ரூமுக்கு சென்று உடை மாற்றி கொண்டு வந்தேன்.

அந்த சிறுவனுக்கு, அடுத்த ஆண்டு யாரும் குடியரசு தினத்தில் Bravery Award தந்ததாக நினைவில்லை. எனக்கும் யானை சவாரி கனவு மீண்டும் வரவேயில்லை.


October 3rd, 2007

மற்றவை சில

சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

————————-

சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன், ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

————————-

இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

————————-

crater lake oregon

போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!