புத்தக ஒட்டடை அடிக்கையில்
இ.பாவின் ராமானுஜர் – அதற்கடியில்
வீரப்பன் பயோகிராபி

இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன்.
படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி.
சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை.
என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும்.
போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய் இருக்கிறது. யார் யாரோ, “கலக்கறீங்க சார்” என்று மெயில் அனுப்புகிறார்கள். விகடனின் ரீச் தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி !!
“விகடன்ல எல்லாம் போட்ருக்காங்க, இன்னும் அதை update பண்ணாம இருக்கியே அசமஞ்சம்” என்று நினைப்பவர்களுக்கு, ஹிஹி !!. கூட்டம் வரும்போதே, இந்த வலைதளத்தில் எழுதித் தள்ளி, யாரையும் போரடிக்கிற எண்ணமில்லை. வழக்கம் போல எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல புத்தகமோ/படமோ/விஷயமோ பற்றி எழுத தோன்றி நேரமிருக்கும் போது, கண்டிப்பாய் கிறுக்கல்.
பி.கு – இப்போதைக்கு படிக்க கிறுக்கலின் பழைய பத்திகள் அல்லது இருக்கவே இருக்கு கிறுக்கலின் ஆங்கில பதிப்பு.
காதில் பாட்டோடு டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே என்னுடைய ஒரு நாளைய ஓடும் கோட்டா முடிந்திருந்தது. கலைத்துப் போய் நிற்கலாம் என்று மூச்சு வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அந்த பாட்டு ஆரம்பித்தது.
இந்த பாட்டைக் கேட்டு்ப்/பாடிக்கொண்டே கொஞ்சம் எக்ஸ்ட்ரா காலரிகளை காலி செய்யலாம் என்று நினைத்து, மீண்டும் முழு மூச்செடுத்து ஓட ஆரம்பித்தேன். பாட்டு ஓட, நான் ஓட, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடின. வியர்வை வழிய வழிய மே.ல் மூ..ச்..சு வா….ங்….க, இனிமேல் சத்தியமாய் ஓட முடியாதென்று, டிரட்மிலின் அந்த ஹாண்டில் பாரை ஒரு கையிலும், வலதுபுற வயிற்றை மறு கையிலும் பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்த போது அந்த வரிகள் வந்தன…
தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் – சொல்லும்
அந்தக் கணத்தில் வியர்வை வழியும் கண்களினூடே சற்றே காந்தி தெரிந்தார்.
ஒண்ணு எழுது இல்லாகட்டி இழுத்து மூடு என்றெல்லாம் அன்பர்கள் மெயில் அனுப்பியதால் கொஞ்சம் பயந்து போய் இந்த ‘உள்ளேன் அய்யா!!’ பத்தி. இத்தனை நாளாய் எழுத கூடாது என்று எண்ணமில்லை. எழுத விஷயமிருந்தும், நேரமில்லாமையும், நேரமில்லாமையும் மற்றும் நேரமில்லாமையும் தான் காரணங்கள். நேரமில்லை ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொன்னாலும், அது தான் காரணமாயிருக்கும் போது என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.
படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், Fight Club எழுதிய சக் பலெனிக்கின்[Chuck Palahniuk] ராண்ட். கடைசியாய் பார்த்த நல்ல படம், மெல் கிப்சனின் அப்போகாலிப்டோ. இனி எழுத நினைக்கும்(கவனிக்க – ‘நினைக்கும்’) சில விடயங்கள் -
- கடைசியாய் படித்த ‘அந்த’ புத்தகம்.
- பார்த்த அற்புத/சில ‘அதி அற்புத’ படங்கள்.
- சென்னை விஜயம்.
ஆக இன்னும் சரக்கு தீர்ந்து போய்விடவில்லை. Hang on, BRB !!

ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான்.
அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக வந்து விட, ரெண்டு வாரம் கொஞ்சம் அதிகமாய் சோப்பு போட்டு, பேர் அண்டு லவ்லி அப்பி, தினமும் அயர்ன் பண்ணி ஜீன்ஸ் போட, பசங்களெல்லாம் மிரண்டு போனார்கள். அந்த அண்ணாவை வைத்து, இதெல்லாம் இந்த காமிராவால வந்தது, நீ சுமாராத் தான் இருக்க தம்பி என்று உண்மையை உணர வைத்தார்கள்.
அதற்கு பிறகு காமிரா கத்துக் கொடுத்தார்கள். அப்பாவியாய் வரும் கஸ்டமர்களுக்கு என்னை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வைத்தார்கள். டார்க் ரூமில நிற்க வைத்து டெவலப்மெண்ட் சொல்லிக் கொடுத்தார்கள். காமிராவிற்கு முன் போய், காமிராவிற்கு பின் என்றானது. Photography கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் யாராவது என்னைக் கேட்டால், நானெல்லாம் அந்த காலத்து ஆசாமி, பிலிம் ரோல்ல படமெடுத்து கத்துக்கிட்டவன் என்று மார்தட்ட முடிகிறது.
அதற்கு பிறகு செந்திலுடன் பேசும் போது என் போட்டோகிராபி ஆசையை பார்த்து, அவனுக்கும் வேறு ஆள் கிடக்காததால், அவனின் கனவுப் படத்துக்கு காமிராமேனாக கால்ஷீட் போட்டான். அவனுடன் சேர்ந்து கதாசிரியனானேன் என்பது epilogue. அந்த காமெடி பற்றி மற்றோரு சமயம்.
2002ல் அமெரிக்கா வந்த போது, கொஞ்சம் டாலர் சேர்த்து, ஒரு கேனன்(canon) வாங்கினேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வேளாங்கன்னியிலிருந்து ரெயிலில் வந்து கொண்டிருந்த போது, உதயசூரியனை படமெடுக்கப் போய், CCD காலி. பிறகு ஒரு point and shootஆக சல்லிசாய் ஒரு சோனி வாங்கினேன். ரொம்பவும் பிடித்துப் போன காமிராவது. “எவன் லென்ஸை மாத்தி மாத்தி திருகிண்டிருப்பான்” என்று அந்த சோனியுடன் அக்கியமானேன்.
போன வருட கடைசியில் Nikon D40 என்றொரு காமிரா அறிமுகப்படுத்தியது. நல்ல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர்(single-lens reflex) காமிராவாதலால், மீண்டும் காமிராவிற்கு பின் என ஆசை துளிர் விட ஒரு ஆறு மாதம் கழித்து, இப்போது வாங்கி விட்டாயிற்று. சதக் சதக் என்று நொடிக்கு இரண்டரைப் படமெடுக்கலாம். டெலிபோட்டோ லென்ஸ் போட்டு பிசி.ஸ்ரீராம் மேட்டர்களை முயற்சிக்கலாம்.
அதெல்லாம் விடுத்து இப்போதைக்கு lazy lensசிலும் flickrயிலும் சுமாரான படங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நல்ல புகைப்படம் வரும் தருணங்கள் ரொம்பவும் அபூர்வம் தான். இந்த டெக்னாலஜியில் யார் வேண்டுமானாலும் நல்ல படமெடுக்கலாம். நல்ல எஸ்.எல்.ஆரும் மண்டை மண்டையாய் லென்ஸுகள் மட்டுமே முக்கியம். சென்னைக்கு செல்லும் போது ஒரு போட்டோ கட்டுரை செய்ய ஆசை. பார்க்கலாம்.