scribbles

January 24th, 2011

பன்சாலிப்பூர்

போன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள். காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான். ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.

உதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது:

’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.

ரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.

இதன் பாடம் மக்கள் philistines என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

ஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.

0000

ஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’ என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.

நாளையிலிருந்து ஜாகிங் செய்யணும், அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா, இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.
ஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.

உங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன? அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.

0000

மேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

0000

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்கும் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர். குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.

போன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன். Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.

Euthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.

பன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன? ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.

உணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ஒத்திப்போடாமல் பார்த்துவிடுங்கள்.

0000

  • let'em know:
subbudu | # | 6:34 am | இன்னபிற, உலகம், பயாஸ்கோப் | Comments Off
January 17th, 2011

மறந்து போனவை

டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.

எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.

என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன். மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.

நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர். மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட். ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.

ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை. சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார். மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது. மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள். ரொம்ப சந்தோஷம்.

இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு. இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.

இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.

இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart) ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை. இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன. இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட். கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.

000000

இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது eclectic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.

அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது. ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது. இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா? அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.

ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான eclectic columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார். வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.

00000

அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான) ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.

அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன. மறக்கிறார்கள். மறந்து மறந்து மரிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள். பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.

இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.

இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார். அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய். கவித்துவம் என்று சொல்லலாமா?

00000

  • let'em know:
subbudu | # | 9:05 am | அமெரிக்கா, இன்னபிற, எழுத்தாளர்கள், பத்திரிக்கை, மனிதர்கள், மீடியா | Comment (1)
January 7th, 2011

கடிகாரத்தை காணவில்லை

இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை. இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.
இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள். ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும், அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது. உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது. மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora, கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி, clean tech, மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம். குட்லக்.

0000

நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது. அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை. இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று. அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை. என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

0000

இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

கல்லூரி படிக்கும்போது, புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள். திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள். அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

- இன்னபிற பத்தி.

  • let'em know:
subbudu | # | 6:04 pm | இன்னபிற, இயந்திரா, உலகம், சென்னை | Comments Off
January 5th, 2011

குழப்படி கேஸ்

மன்மதன் அம்பு பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் தோன்றிற்று, கமல் மணி ரத்னம் போன்ற திரைக்கதாசிரியர்கள், தமிழ் சினிமாவின் வழக்கமான அபத்தத் தொடக்கத்தினை சற்றே மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆற்றங்கரையில் பொழுது புலர்ந்து, சூரியன் உதித்து, பறவைகள் பறந்து, இலைகள் அசைந்து ஆரம்பிக்கும் படங்கள் வருவது நின்று சில காலம் ஆகிற்று. ஆனாலும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் ஆயத்தங்கள் குறையவில்லை. ராவணனிலும் ம.அ.விலும் படமும் கதையும் சடுதியில் ஆரம்பிக்கின்றன. என்ன ஏது என புரிய சற்றே நேரமெடுத்தாலும் படத்துக்குள் போய்விடுகிறோம். கமலைத் தவிர மற்ற காரெக்டர்கள் டக்கென அறிமுகமாகி சட்டென மனதில் பதிந்து விடுகின்றன. நிற்க. இதற்கு மேல் ஏறக்குறைய, ஆமாம் ஏறக்குறைய, எல்லாமே குறைகளின் பட்டியல் தான். படிக்க விரும்பாதவர்கள், வலது மேல்புறம் இருக்கும் இண்டூ குறிக்கு குறி வைக்கலாம்.

படத்தின் கதை தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பார்முலாக்களில் ஒன்று. கட்டிக்கப் போகும் பெண்ணைத் சந்தேகப்படும் டு-பி கணவனும், அவளை பல்வேறு காரணங்களுக்காக துரத்தி, சிரித்து, அழுது ஒருவழியாய் மணம் செய்யும் ஹீரோவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள். ஆரம்பத்தைத் தவிர திரைக்கதையில் புதிதாக ஒன்றுமேயில்லை. இதையே முழுமையான காமெடியாக செய்திருக்கலாம் என்றாலும் கமல் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாதிரியான ப்ளாக் காமெடி தான். கதையில் ஒரு எமோஷனல் உபகதையும், காமெடி கதையும் உடன் பயணிக்கின்றன. காமெடி சீன்களில் ஹீரோ காமெடியாய் நடித்தாலும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சோகம் சிரிப்பை மட்டுப்படுத்துகிறது. இவ்வகை கதையைத் தான் எடுக்க வேண்டும் என நினைப்பது தப்பல்ல, ஆனாலும் விளம்பரமும் கதையும் வெவ்வேறு ஜான்ராவைக் குறிப்பதனால் குழப்படி கேஸ் என மக்கள் திண்டாடுவது தெரிகிறது. மும்பை எக்ஸ்ப்ரஸுக்கு பிறகு இது இரண்டாவது முறை.
இருபதாவது முறை என்றும் படத்தில் ஒன்று இருக்கிறது. கதையில் இறந்து போன மனைவியோ காதலியோ, கமலுக்கு அமைவது. விக்ரமில் ஆரம்பித்து, வேட்டையாடு விளையாடு வரை என்று இணையத்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமலின் தனி வாழ்க்கைச் சோகம் அவரையும் தாண்டி அவர்தம் படத்தில் வழிகிறதோ என தோன்றுகிறது. அவ்வை சண்முகி, விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களின் பாடல்களில் கொஞ்சம் சோகச் சரித்திரம் எட்டிப் பார்த்தன.

எதிர்பாராத விதமாய் வந்து விழும் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை. வாயாடி குழந்தை, கான்செர் நண்பன், குடிகார சந்தேகப் பிராணியான ஆண்டி-ஹீரோ என எல்லோரும் கார்ட்போர்ட் காரெக்டர்கள். எந்த கதாபாத்திரமும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதில்லை. ஹீரோ ஏமாற்றுவதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது, ஒரு சோக ப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு ரிவர்ஸ் ஸ்லோமோஷன் பாடல் ஒன்று தான் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. என்ன தான் இதற்கு பல ஹாலிவுட் மற்றும் அலைபாயுதே உதாரணங்களைக் காட்டினாலும், இத்தகைய கிளைக்கதைக்கு இவ்வகை தயாரிப்பு ஏக பொருத்தம்.
பாரீஸ் விமான நிலையக் காட்சிகளில் மனுஷ் நந்தன் கலக்குகிறார். ஆனால் கடைசி வெனிஸ் காட்சிகளில், அவற்றில் நடிப்பவர்களின் சன் க்ளாஸ்களில் சினிமா ஷூட்டிங் ரிப்லெக்டர்களும், காமிராவும் அதன் அருகில் நிற்பவர்களும் தெரிவது துரதிஷ்டம்.
இவை தவிர கமலுக்கு வயசாகி விட்டதும், குழந்தைகளுக்கு கமல் எடுக்கும் கோலோசியம் பாடமும், மாதவனின் காரியர் அசம்பாவிதமும், திரைக்கதை ஓட்டைகளும், கவிதா பிரதாபங்களும் இன்னபிற விஷயங்களும் ஏகமாய் இருந்தாலும், தமிழ்நாட்டில் எல்லோரும் கமல்/ரஜினி படங்களை ஒரு முறையேனும் பார்த்துவிடும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால், அதிகம் விவாதிக்காமல் இருந்து விடலாம்.

000

சமீபத்தில் பார்த்த மற்றொரு சுமார்ப் படம், டெவில். மனோஜ் நைட் ஷ்மாளன் தயாரிக்கும் முப்பெரும் படங்களில் முதல் படம். நகர வாழ்க்கையில் அமானுஷ்யத்தை கலக்கும் முயற்சி.

நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் லிப்ட் நடுவழியில் நின்று விடுகிறது. காமிரா மூலம் செக்யூரிடியும் போலீஸும் உள்ளே நடப்பதைப் பார்த்தபடி இருக்கிறார்கள். உதவி செய்யப் போகிறவர்கள் சாகிறார்கள். லிப்டின் உள்ளே ஐந்து பேர். போலீஸ் அவர்களைப் பற்றி ஆராயும் போது தான் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் எனத் தெரிகிறது. உள்ளே இருக்கும் பேய்(!) ஒவ்வொருவராய் கொல்கிறது. யாராவது தப்பித்தார்களா என்பது மிச்சக் கதை. இவ்வகைப் படங்களில் முதல் பாதி பயமுறுத்தினாலும் முடிவு சுமாராய்த்தான் இருந்தாக வேண்டும் என்பது இவ்வகைக் கதைகளின் கதி. படுபயங்கரமான முடிவுடைய பேய்ப் படங்கள் மிகக் குறைவு. க்யூப்ரிக்கின் The Shining கூட so so முடிவு தான்.

- இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • let'em know:
subbudu | # | 5:46 pm | இன்னபிற, பயாஸ்கோப் | Comments Off
December 31st, 2010

கிறுக்கல் அவார்ட்ஸ் 2010

வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 – The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 – At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி – Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

  • let'em know:
subbudu | # | 6:35 pm | அமெரிக்கா, இசை, இணையம், இந்தியா, இயந்திரா, இலக்கியம், உலகம், எழுத்தாளர்கள், பயாஸ்கோப், புத்தகம், மனிதர்கள் | Comments (2)

scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>




« Previous Entries

Next Entries »